பசுவை ‘தேசத்தின் தாயாக’ அறிவிக்கக் கோரி... குஜராத்தில் 6 பேர் தற்கொலை முயற்சி
ஆமதாபாத்: 'தேசத்தின் தாயாக' பசுவை அறிவிக்கவேண்டும் என வலியுறுத்தி 6 பேர் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் குஜராத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்தாண்டு இந்தியாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய விவகாரங்களில் மாட்டிறைச்சியும் ஒன்று. உத்திரப்பிரதேசத்தில் மாட்டிறைச்சி சாப்பிட்டதாகக் கூறி ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டார். இதேபோல், காஷ்மீரில் மாட்டிறைச்சி விருந்து வைத்த எம்.எல்.ஏ. தாக்கப்பட்டார்.
பசுவை இந்துக்கள் புனிதமாக கருகிறார்கள். இதனால், பசு இறைச்சிக்கு பல்வேறு மாநிலங்களில் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பசுவை இந்தியாவின் தாயாக அறிவிக்க வெண்டும் என வலியுறுத்தி, குஜராத் மாநிலம் ராஜ்காட்டில் 6 பேர் இன்று தற்கொலைக்கு முயன்றனர்.
உடனடியாக அக்கம்பக்கத்தார் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது ஆபத்தான நிலையை அவர்கள் கடந்து விட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குஜராத்தில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.