குஜராத்தில் ... 6 மாத குழந்தையை பலாத்காரம் செய்த 32 வயது காமக் கொடூரன்!
அகமதாபாத்: குஜராத்தில் ஆறு மாத பெண் குழந்தைப் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் பதான் மாவட்டத்தைச் சேர்ந்த பவான்ஜி தாக்கூர் (32). சம்பவத்தன்று அருகில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார் தாக்கூர்.
அங்கே, தங்களது ஆறு மாத பெண் குழந்தையைப் பார்த்துக் கொள்ளும்படி தாக்கூரிடம் கூறி விட்டு அக்குழந்தையின் குடும்பத்தார் அருகில் இருந்த கோவிலுக்குச் சென்றுள்ளார். மீண்டும் அவர்கள் வீடு திரும்பிய போது, அக்குழந்தை வீறிட்டு அழுத படி இருந்துள்ளது. அப்போது தாக்கூர் அங்கிருந்து வேகமாக வெளியேறியுள்ளார்.
முதலில் குழந்தை பசிக்கு அழுகிறது என நினைத்த தாய், பின்னர் அக்குழந்தையின் பிறப்புறுப்பில் இருந்து ரத்தம் வருவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். என்ன நடந்தது என தாக்கூரிடம் குழந்தையின் பெற்றோர் விசாரித்துள்ளனர்.
அப்போது, குழந்தையைப் பாலியல் பலாத்காரம் செய்ததை ஒப்புக் கொண்ட தாக்கூர், இந்த விவகாரத்தை வெளியில் கூறினால் குடும்பத்தோடு கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகத் தெரிகிறது.
உடனடியாக, குழந்தையை சிகிச்சைக்காக தர்புர் மருத்துவமனையில் சேர்த்த பெற்றோர், இது தொடர்பாக போலீசில் புகார் அளித்தனர்.
மருத்துவமனையில் குழந்தையின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிகிறது. தப்பியோடிய தாக்கூரைப் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.