நிதி மோசடி: சத்யம் கம்ப்யூட்டர் நிறுவன தலைவர் ராமலிங்கராஜுவுக்கு 6 மாத சிறை!
ஹைதராபாத்: நிதி மோசடியில் ஈடுபட்ட சத்யம் கம்ப்யூட்டர் நிறுவ தலைவர் ராமலிங்கராஜுவுக்கு 6 மாத சிறை தண்டனையும், ரூ.10.3 லட்சம் அபராதமும் விதித்து ஹைதராபாத் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஆந்திராவில் பிரபலமாக விளங்கிய சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனம் ரூ.14 ஆயிரம் கோடிக்கு மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. கார்ப்பரேட் உலகில் மிகப்பெரிய மோசடியாக இது கருதப்பட்டது.

இந்த விவகாரத்தில், கம்ப்யூட்டர் நிறுவன தலைவர் ராமலிங்கராஜூ, அவரது சகோதரர் ராமராஜூ மற்றும் இயக்குனர்கள் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
34 மாத சிறைவாசத்துக்கு பிறகு ராமலிங்கராஜூம், அவரது சகோதரர் ராமராஜூ, தலைமை நிதி அதிகாரி ஸ்ரீனிவாஸ் ஆகியோர் ஜாமீனில் விடுதலையானார்கள். இவர்கள் மீது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் பல்வேறு வழக்குகளை பதிவு செய்து தனித் தனியாக விசாரித்து வந்தனர்.
இதில் அமலாக்கப்பிரிவு தொடர்ந்த 7 வழக்குகளில் 6 வழக்கின் விசாரணை ஹைதராபாத் நாம்பள்ளியில் உள்ள அமலாக்கப்பிரிவு சிறப்பு கோர்ட்டில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. சத்யம் நிறுவன தலைவர் ராமலிங்கராஜூவுக்கு 6 மாத சிறை தண்டனையும், ரூ.10. 3 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. அவரது சகோதரர் ராமராஜூ மற்றும் தலைமை நிதி அதிகாரி ஸ்ரீனிவாசன், இயக்குனர்கள் ராம் பைனப்பட்டி உள்பட 8 பேருக்கு தலா 6 மாதம் சிறை தண்டனையும், தலா ரூ.5 லட்சம் அபராதமும் விதித்து சிறப்பு நீதிமன்ற நீதிபதி லட்சுமணன் தீர்ப்பு அளித்தார்.
சி.பி.ஐ. சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள் மீதான வழக்கில் வருகிற 23-ந் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications