பெரும் சோகம்! சிக்கிம் மேகவெடிப்பு.. 6 ராணுவ வீரர்கள் உள்பட 19 பேர் பலி..103 பேரை தேடும் பணி தீவிரம்
காங்டாக்: சிக்கிம் மாநிலத்தின் தீஸ்தா நதியில் ஏற்பட்ட கடும் வெள்ளப் பெருக்கு காரணமாக 14 பேர் உயிரிழந்ததாகவும், 22 ராணுவ வீரர்கள் உள்பட 102 பேரை காணவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான சிக்கிமில் நேற்று முன் தினம் மேகவெடிப்பு ஏற்பட்டது. நேபாள எல்லை அருகே உள்ள லோனக் ஏரி பகுதியில் ஏற்பட்ட இந்த மேக வெடிப்பு காரணமாக டீஸ்டா நதியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், சங்தங் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக லக்சன் பள்ளத்தாக்கு பகுதியில் பல இடங்களில் சாலைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.

இதனால், 23 ராணுவ வீரர்கள் உள்பட 102 பேர் காணாமல் போகினர். சிக்கிம் மாநில தலைநகரான காங்டாக், வெள்ளத்தால் மாநிலத்தின் பிற பகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளது. சிக்கிம் மாநிலத்தை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையும் பல இடங்களில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கி மாயமானவர்களை தேடும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது.
இதனிடையே, சிக்கிம் மாநிலத்தில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதில் பலியான 19 பேரில் 6 பேர் ராணுவ வீரர்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 16 ராணுவ வீரர்கள் உள்பட 100 க்கும் மேற்பட்டவர்களை இன்னும் காணவில்லை என்றும் அவர்களை தேடும் பணி முழு வீச்சில் நடைபெறும் சிக்கிம் மாநில அரசு வட்டாரங்கள் கூறுகின்றன. சுமார் 3 ஆயிரம் சுற்றுலாப்பயணிகள் சிக்கி தவிப்பதாகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து 2,500 பேர் மீட்கப்பட்டுள்ளதோடு, 6 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருப்பதாகவும் சிக்கிம் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாப்பயணிகள் தற்போதைக்கு சிக்கிம் மாநிலத்திற்கு வர வேண்டாம் எனவும் அந்த மாநில அரசு கோரிக்கை விடுத்துள்ளது. திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் நீர் மின் நிலையமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு இருப்பதால் மீண்டும் மின் உற்பத்தியை தொடங்க அனைத்து தேவையான நடவடிக்கைகளையும் மாநில அரசுக்கு சொந்தமான ஹைட்ரோபவர் பவர் கார்ப்பரேஷன் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.












Click it and Unblock the Notifications