அடுத்தடுத்து தமிழர்கள் கைது.. செம்மரக்கட்டைகள் பறிமுதல்... மீண்டும் பதற்றத்தில் தமிழக எல்லை
ஆந்திர மாநிலத்தில் செம்மரம் வெட்டிக் கடத்தியதாக தமிழர்கள் 6 பேரை அம்மாநில போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
கடப்பா: ஆந்திர மாநிலத்தில் செம்மரம் வெட்டிக் கடத்தியதாக தமிழர்கள் 6 பேரை அம்மாநில போலீசார் கைது செய்துள்ளனர். திருப்பதி மலைப் பகுதியில், தமிழர்களிடமிருந்து ரூ.30 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை ஆந்திர போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இந்தச் சம்பவங்களால் மீண்டும் தமிழக எல்லை கிராமங்கள் பதற்றத்தில் மூழ்கியுள்ளன.
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் காஜிப்பேட்டை வனப்பகுதியில் செம்மரக்கடத்தல் தடுப்பு பிரிவு அதிரடிப்படை இன்ஸ்பெக்டர் ஆலிபாஷா, ராம்மோகன்ரெட்டி, வனத்துறை நிலைய அலுவலர் குருவய்யா தலைமையில் ரோந்து சென்றனர்.

அப்போது வனப்பகுதியில் உத்திரப்பிரதேச பதிவு எண் கொண்ட கார் வந்தது. அதில் வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் தாலுக்கா மல்லபட்டு கிராமத்தை சேர்ந்த பெருமாள், நீலிவாசம் கிராமத்தை சேர்ந்த துக்காராம், நல்லிப்பட்டு அய்யனார், தருமபுரி மாவட்டம் அரூர் தாலுக்கா வீரப்பநாயக்கபட்டு கிராமத்தைச் சேர்ந்த ராமஜெயம், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை சேர்ந்த மாதேஷ், திருவண்ணாமலை மாவட்டம் கிழ்பெருனாமத்தூரைச் சேர்ந்த சகாதேவ் ஆகிய 6 பேர் இருந்துள்ளனர்.
Recommended Video

அவர்களிடம் நடத்திய விசாரணையில் முறையான தகவல்கள் கிடைக்கவில்லை என்பதால் அவர்களை போலீசார் கைது செய்தனர்.
மேலும், இதே போல் ஸ்ரீவாரி மெட்டு மலைப்பாதையில் ரோந்து சென்று கொண்டிருந்த எஸ்.ஐ. வாசு தலைமையிலான போலீசார், திருமலைக்கு பாத யாத்திரை செல்லக் கூடிய மலைப்பாதையை ஒட்டியுள்ள வனப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ 30 லட்சம் மதிப்புள்ள 12 செம்மரம் இருப்பதை பார்த்து அவற்றை பறிமுதல் செய்தனர்.
வனப்பகுதியில் தப்பி சென்றவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. ஆந்திராவில் மீண்டும் செம்மரக்கட்டைகள் கடத்தல் மற்றும் கைது விவகாரம் அதிகரித்துள்ளதால், ஆந்திர எல்லையோர தமிழக கிராமங்களில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications