பெண்கள் உடைமாற்றும் அறையில் கேமராவை மறைத்து வைக்கவில்லை: ஃபேப்இந்தியா விளக்கம்
பனாஜி: கன்டோலிம் நகரில் உள்ள கடையில் கேமரா எதுவும் மறைத்து வைக்கப்படவில்லை என்று ஃபேப்இந்தியா நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
கோவாவில் உள்ள கன்டோலிம் நகரில் இருக்கும் ஃபேப்இந்தியா துணிக்கடைக்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி சென்றார். அங்கு ஆடை வாங்கிய அவர் அதை போட்டுப் பார்க்க உடை மாற்றும் அறைக்கு சென்றார். அப்போது அங்கு கேமரா மறைத்து வைக்கப்பட்டிருந்ததை பார்த்த அவர் அதிர்ச்சி அடைந்து உள்ளூர் எம்.எல்.ஏ. மைக்கேல் லோபோவுக்கு தகவல் கொடுத்தார். லோபோ போலீசில் இது குறித்து புகார் அளித்தார்.
அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கடைக்கு சீல் வைத்து, ஊழியர்கள் நான்கு பேரை கைது செய்தனர். அவர்கள் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில் நடந்த சம்பவம் பற்றி ஃபேப்இந்தியா நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் அது கூறியிருப்பதாவது,

மன்னிப்பு
நடந்த அசௌகரியத்திற்காக மதிப்பிற்குரிய மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். கன்டோலிம் கிளையில் சர்ச்சையில் சிக்கியுள்ள கேமரா கடையின் கண்காணிப்பு கேமராவாகும். அதுவும் அந்த கேமரா மக்கள் துணி வாங்கும் இடத்தில் தான் இருந்தது.

கேமரா
கன்டோலிம் கிளையில் எந்த இடத்திலும் கேமரா எதுவும் மறைத்து வைக்கப்படவில்லை. உடை மாற்றும் அறைகளில் கேமராக்கள் மறைத்து வைக்கப்படவில்லை. கடையில் இருந்த கேமராக்கள் அனைத்தையுமே மக்கள் பார்க்கும் இடத்தில் தான் வைத்துள்ளோம். இது அனைத்து கடைகளிலும் இருக்கும் கண்காணிப்பு கேமராக்கள் தான்.

பாதுகாப்பு
சிசிடிவி கோமராக்களை கடையில் வைப்பது சாதாரண விஷயம் ஆகும். கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக சிசிடிவி கேமராக்கள் கடைகளில் வைக்கப்படுகின்றன. போலீசார் கன்டோலிம் கடையில் நேற்று ஆய்வு செய்து கேமராக்கள் வைக்கப்பட்ட இடங்களில் எந்த வில்லங்கமும் இல்லை என்பதை கண்டுபிடித்துள்ளனர்.

பெண்கள்
பெண்களை மையமாக வைத்து நடத்தப்படும் ஸ்தாபனம் ஃபேப்இந்தியா. எங்கள் நிறுவனத்தில் பணிபுரிபவர்களில் 70 சதவீதம் பேர் பெண்கள். நாங்கள் பெண்களின் கண்ணியத்தை மதிப்பவர்கள். வாடிக்கையாளர்கள் தான் எங்களுக்கு மிகவும் முக்கியம்.

விசாரணை
கேமரா விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த 3 பெண்கள் அடங்கிய குழுவை அமைத்துள்ளோம். அவர்கள் விசாரணை நடத்தி எங்களிடம் அறிக்கை அளிப்பார்கள் என்று ஃபேப்இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications