இத்தனை போட்டோகிராபர்கள் இருக்காங்க.. "இவரும்" வந்துட்டாரு பாருங்க! கிரிக்கெட் போட்டியில் சுவாரஸ்யம்
கவுகாத்தி: இந்தியா- தென்னாப்பிரிக்கா இடையேயான டி 20 போட்டியின் போது மைதானத்தில் ஒரு பாம்பு நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தியா- தென்னாப்பிரிக்கா இடையேயான 2ஆவது டி 20 போட்டி அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள பார்சபாரா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி முதலில் களம் இறங்கி பேட்டிங் செய்தது.
போட்டி விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்த போது 7ஆவது ஓவரின் போது மைதானத்திற்குள் நெளிந்தபடியே ஒன்று வந்து கொண்டிருந்தது. இதை தென்னாப்பிரிக்கா வீரர்கள் கவனித்தனர்.

போய் பார்த்தால் பாம்பு
போய் பார்த்தால் பாம்பு... உடனே அதிர்ச்சியடைந்து கிரிக்கெட் அம்பயரிடம் கூறினர். இதையடுத்து பாம்பு புகுந்த அந்த இடத்திலிருந்து வீரர்கள் விலகி வேறு இடத்தில் போய் நின்றனர். இதனால் போட்டி சில நேரம் தடைபட்டது. உடனடியாக விரைந்து வந்த மைதான பராமரிப்பாளர்கள், அந்த பாம்பை பிடித்து சென்றனர்.

ஆட்டம் மீண்டும் தொடக்கம்
இதையடுத்து ஆட்டம் மீண்டும் தொடங்கியது. இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. பாம்பு என்ன விளையாட்டு போட்டியை படம் எடுக்க வந்ததா என நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகிறார்கள். இதே போல் கடந்த 2019ஆம் ஆண்டு ராஞ்சி தொடருக்கான போட்டியின் போதும் பாம்பு நுழைந்தது.

விதர்பா அணிகள்
விஜயவாடாவில் ஆந்திரபிரதேசம்- விதர்பா அணிகள் மோதிய போது போட்டி தொடங்குவதற்கு முன்பே பாம்பு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த பாம்பு அப்புறப்படுத்தப்பட்டது. இதன் பிறகு போட்டியானது தொடங்கியது. பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்பார்கள். அப்படியிருக்கும் போது கிரிக்கெட் வீரர்கள் மட்டும் என்ன விதிவிலக்கா?

பாம்பு நுழைந்தது
பொதுவாக மழை, மோசமான வானிலை, யாருக்கேனும் அடிபட்டுவிட்டால் மட்டுமே கிரிக்கெட் போட்டிகள் சற்று நேரம் தாமதமாகும், இல்லாவிட்டால் நிறுத்தி வைக்கப்படும். ஆனால் பாம்பு நுழைந்ததால் கிரிக்கெட் போட்டிகள் சற்று நேரம் நிறுத்தி வைக்கப்படுவது அச்ச உணர்வையும் சிரிப்பலையையும் ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications