தடை அமலில் இருந்தபோது மேகி நூடுல்ஸ் விற்று சிக்கலில் மாட்டியுள்ள ஸ்னாப்டீல்
ஜெய்பூர்: தடை அமலில் இருக்கையில் 5 மாநிலங்களில் ஆன்லைன் மூலம் மேகி நூடுல்ஸ் விற்பனை செய்ததற்காக ஸ்னாப்டீல் நிறுவன சிஇஓ மற்றும் நிறுவனர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நெஸ்லே இந்தியா நிறுவன தயாரிப்பான மேகி நூடுல்ஸில் அளவுக்கு அதிகமாக ஈயம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட பிறகு பல்வேறு மாநிலங்களில் அதற்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் தடை விதிக்கப்பட்டது. தடை குறித்த வழக்கை விசாரித்து வந்த மும்பை உயர் நீதிமன்றம் கடந்த அக்டோபர் மாதம் 19ம் தேதி தான் மேகி நூடுல்ஸ் மீதான தடையை நீக்கி உத்தரவிட்டது. அதன் பிறகு மேகி நூடுல்ஸ் மீண்டும் விற்பனைக்கு வந்தது.

இந்நிலையில் தடை உத்தரவு அமலில் இருந்த ஜூன் மாதம் 7ம் தேதி முதல் அக்டோபர் மாதம் 30ம் தேதி வரையிலான காலத்தில் ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநிலங்களில் ஆன்லைனில் ஸ்னாப்டீல் நிறுவனம் மேகி நூடுல்ஸை விற்பனை செய்துள்ளது. இதையடுத்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் ஸ்னாப்டீல் நிறுவன சிஇஓ குணால் பஹ்ல் மற்றும் நிறுவனர் ரோஹித் பன்சால் ஆகியோர் மீது போலீசில் புகார் அளித்தார்.
அவரது புகாரின்பேரில் தடையை மீறி மேகி நூடுல்ஸ் விற்பனை செய்ததாக குணால் மற்றும் ரோஹித் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இது குறித்து ஸ்னாப்டீல் செய்தித் தொடர்பாளரை தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் கூறுகையில்,
எங்கள் நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாக எங்களுக்கு தகவல் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை என்றார்.












Click it and Unblock the Notifications