குஜராத் பெண்ணை வேவு பார்த்த விவகாரம்… விசாரணை கமிஷனை வாபஸ் பெறும் மோடி அரசு!
டெல்லி: குஜராத்தில் இளம் பெண் ஒருவரை உளவுத்துறை போலீஸார் வேவு பார்த்த விவகாரம் தொடர்பாக முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அமைத்த விசாரணைக் கமிஷனை திரும்பப் பெறக் கோரி மத்திய அமைச்சரவையிடம் கோரிக்கை வைக்கவுள்ளது மத்திய உள்துறை அமைச்சகம்.
அதாவது காங்கிரஸ் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அமைத்த விசாரணைக் கமிஷனை பாஜக தலைமையிலான தேசிய முற்போக்குக் கூட்டணி அரசு கலைக்கப் போகிறது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்த விசாரணைக் கமிஷனை அறிவித்தது முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு. இளம் பெண் வேவு பார்க்கப்பட்டது உள்பட மொத்தம் 3 உளவு வழக்குகளை விசாரிக்க கமிஷன் அமைக்கப்பட்டது.
மற்ற இரண்டு வழக்குகள் - ஹிமாச்சல் பிரதேச முதல்வர் வீரபத்ர சிங்கை உளவு பார்க்க முந்தைய துமால் அரசு பிறப்பித்த உத்தரவு மற்றும் அருண் ஜேட்லியின் தொலைபேசி அழைப்புகளை உளவு பார்த்தது தொடர்பானது.
இந்த மூன்று வழக்குகளையும் கமிஷன் அமைத்து விசாரிக்கும் முடிவை திரும்பப் பெறக் கோரி அமைச்சரவையிடம் கோரிக்கை வைக்கவுள்ளதாம் உள்துறை அமைச்சகம்.
விசாரணைக் கமிஷன் அமைக்கும் முந்தைய மத்திய அரசின் முடிவு அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று ஏற்கனவே உள்துறை இணை அமைச்சர் கிரன் ரிஜு விமர்சித்திருந்தார். மேலும் பாஜகவும் கூட இதை ஏற்கனவே எதிர்த்திருந்த்து.
தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த கமிஷனை கலைக்க அது முயற்சி மேற்கொண்டுள்ளது.
குஜராத்தில் இளம் பெண் வேவு பார்க்கப்பட்ட சம்பவத்தின்போது முதல்வராக நரேந்திர மோடி இருந்தார் என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications