குஜராத் இளம்பெண் வேவு விவகாரத்தில் விசாரணை கமிஷன் இல்லை- சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு!
டெல்லி: குஜராத்தில் இளம்பெண் ஒருவர் வேவு பார்க்கப்பட்ட விவகாரத்தில் விசாரணை கமிஷன் அமைக்கப்போவதில்லை என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
குஜராத் மாநிலத்தில் இளம்பெண் ஒருவர் அம்மாநில முதல்வர் நரேந்திர மோடியின் வலது கரமான அமித் ஷாவின் உத்தரவின் பேரில் போலீசார் வேவு பார்க்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் போலீசாருக்கு அமித்ஷா உத்தரவிட்ட டேப் உரையாடலும் வெளியாகின. இந்த விவகாரத்தில் மத்திய அரசு ஒரு விசாரணைக் கமிஷனை அமைக்கவும் முடிவு செய்திருந்தது.
ஆனால் கூட்டணிக் கட்சிகளின் கடும் எதிர்ப்பினால் இம்முடிவை மத்திய அரசு கைவிட்டது. இந்நிலையில் வேவு பார்க்கப்பட்ட பெண்ணின் தந்தை உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், மத்திய, மாநில அரசுகள் இதுதொடர்பான விசாரணையில் ஈடுபடுவது திருமணம் முடிந்த மகளின் தனிப்பட்ட வாழ்க்கையை கெடுத்துவிடும். எனவே அதுபோன்ற எந்த விசாரணையையும் நடத்த வேண்டாம் என்று அரசுக்கு உத்தரவிட கோரியிருந்தார்.
இம்மனு இன்று விசாரணைக்கு வந்த போது, விசாரணைக் கமிஷன் அமைக்கப் போவதில்லை என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.
மேலும் அப்படி ஒரு விசாரணக் கமிஷன் அமைக்கப்பட்டால் அது தொடர்பாக குஜராத் உயர்நீதிமன்றத்தையே நாடலாம் என்றும் அப்பெண்ணின் தந்தைக்கும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.












Click it and Unblock the Notifications