தர்மபுரி அருகே பாலத்தில் மோதி விழுந்த கார்: பெங்களூர் சாப்ட்வேர் இன்ஜினியர் குடும்பம் பலி
தர்மபுரி: பாலத்தில் மோதி கார் கீழே விழுந்த விபத்தில் பெங்களூரில் பணியாற்றும் சாப்ட்வேர் இன்ஜினியரின் மனைவி குழந்தை உட்பட 3பேர் உயிரிழந்த பரிதாப சம்பவம் தர்மபுரி அருகே நடந்துள்ளது.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம், தொளுவானி பகுதியை சேர்ந்தவர் ஹனீஸ் (30). பெங்களூரில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றுகிறார். இவரது மனைவி லீனா ஜோஸ்னா (30). இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகனும், அபின் என்ற ஒன்றரை வயது மகனும் இருந்தனர்.
கேரள மாநிலத்தில் உள்ள சொந்த ஊருக்கு குடும்பத்துடன் சென்றிருந்த ஹனீஸ், நேற்று இரவு அங்கிருந்து பெங்களூருக்கு காரில் புறப்பட்டார். காரில் ஹனீஸ், லீனா மற்றும் குழந்தைகளுடன், ஜார்ஜ் (36) என்பவரும் வந்துள்ளார்.
சேலம்-தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் தொப்பூர் அருகே மேம்பாலத்தில் இன்று காலை 6.45 மணி அளவில் கார் வேகமாக சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பாலத்தில் இருந்து பறந்து சென்று கீழே விழுந்துள்ளது.
மேம்பாலத்தின் தூணில் கார் மோதி நொறுங்கியதில் காரில் இருந்த ஜார்ஜ், ஒன்றரை வயது குழந்தை அபின் ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இடிபாடுகளில் சிக்கி ஹனீஸ், லீனா ஜோஸ்னா மற்றும் 4 வயது மகன் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர்.
தீவட்டிப்பட்டி செக் போஸ்ட் போலீசார் சென்று படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய ஹனீஸ், லீனா ஆகியோரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி லீனா பரிதாபமாக இறந்தார். ஹனீசுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவரிடம் இருந்த செல்போனை எடுத்து அதில் இருந்த எண்களில் தொடர்பு கொண்டு போலீசார் விசாரித்து வருகின்றனர். விபத்தில் பலத்த காயம் அடைந்த 4 வயது மகன் சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான். விபத்து குறித்து மேச்சேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.