பணவீக்கம், விலைவாசி உயர்வு, நிதிநிலை அறிக்கை... மோடி அரசுக்கு காத்திருக்கும் குடைச்சல்கள்!
டெல்லி: பணவீக்கம், நிதிநிலை அறிக்கை, ஆளுநர் நியமனங்கள் என புதிய பிரதமர் நரேந்திர மோடி முன் பல சவால்கள் இருக்கின்றன.
பணவீக்கம்
பணவீக்கத்தை கட்டுப்படுத்துவது நரேந்திர மோடி முன்பாக உள்ள மிக முக்கிய சவாலாக இருக்கும். உணவுப்பொருட்களின் விலை உயர்வே கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் வீழ்ச்சிக்கு மிக முக்கிய காரணமாக இருந்தது. தற்போது நடுத்தர வர்க்கத்தினர் மோடி விலைவாசியை குறைப்பார் என எதிர்பார்க்கின்றனர்.
நிதிநிலை அறிக்கை
மோடி தலைமையில் புதிய அரசு அமைந்தவுடன் முழுமையான நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டியிருக்கும். இதற்கான பணிகளை பிரதமர் அலுவலகம் முடுக்கி விட்டுள்ளது.
பயங்கரவாதம்
பயங்கரவாதத்தை கட்டுப்படுத்துதல் மோடி முன்பாக உள்ள மற்றொரு சவால். இதில் பாரதிய ஜனதா கடுமையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வாய்ப்பிருக்கிறது.
மாவோயிஸ்டுகள்
மாவோயிஸ்டுகளை ஒடுக்குவது தொடர்பாக எந்த மாதிரியான நடவடிக்கைகளை மோடி அரசு மேற்கொள்ளப் போகிறது என்பதும் அனைவரும் எதிர்பார்க்கின்ற ஒன்று.
பங்கு விலக்கல் சாத்தியமா?
நலிவடைந்த பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விலக்குவதற்காகவே முந்தைய வாஜ்பாய் அரசில் ஒரு அமைச்சகமே உருவாக்கப்பட்டது. மீண்டும் அதுபோன்ற பங்கு விலக்கல் துறை அமைச்சகம் உருவாகுமா? என்பதும் முக்கிய எதிர்பார்ப்பு.
நிறைவேறுமா லோக்பால்?
லோக்பால், ஊழல் எதிர்ப்பு மசோதாக்களை நிறைவேற்றுவது மற்றொரு சவால்தான். ராஜ்யசபாவில் பாஜகவுக்கு பெரும்பான்மை உறுப்பினர்கள் இல்லாத நிலையில் எப்படி இந்த மசோதாக்களை பாஜக நிறைவேற்றும்? என்பது அனைவரின் எதிர்பார்ப்பு.
ஆளுநர்கள்
தற்போது 19 மாநிலங்களில் காங்கிரஸ் ஆதரவு ஆளுநர்கள் இருக்கின்றனர். இவர்களை நீக்கிவிட்டு புதிய ஆளுநர்கள் நியமிக்க வேண்டும்.