அந்த நேரத்திலும் போய் பேட்டி கேட்ட மீடியா.. சங்கடத்தில் சிக்கிய ராணுவம்.. நல்லவேளை எல்லாம் சக்சஸ்
டெல்லி: காஷ்மீர் மாநிலம் யூரி தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா புதன்கிழமை இரவு 12.30 மணி முதல் அதிகாலை 4.30 மணிவரை ஆக்கிரமிப்பு பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து சர்ஜிக்கல் ஸ்டிரைக் எனப்படும், தீவிரவாத இலக்குகளை குறிவைத்து நடத்தும் தாக்குதலை வெற்றிகரமாக முடித்து சுமார் 40 தீவிரவாதிகளை கொன்று குவித்ததாக அறிவிக்கப்பட்டது.
இந்த தாக்குதலில் அதிகம் பாதிக்கப்பட்டது, லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகள்தானாம். இந்திய எல்லைக்குள் ஊடுருவ திட்டமிட்டு எல்லை பக்கம் பதுங்கியிருந்ததில் பலரும் அவ்விரு தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள்தான்.
இத்தாக்குதலுக்காக ஒரு வாரத்திற்கும் மேலாக தீவிரமாக திட்டமிட்டு வந்துள்ளது ராணுவம். அதிரடிக்கான நேரத்தையும் முன்கூட்டியே முடிவு செய்து வைத்திருந்துள்ளது.
கசிந்த தகவல்
இந்த தாக்குதலை இரவு 12.30 மணிக்கு தொடங்குவதாக முதலில் திட்டமில்லை என்கிறது ராணுவ வட்டார தகவல். முன்கூட்டியே தொடங்கிவிடுவதுதான் ராணுவ திட்டமாக இருந்துள்ளது. ஆனால் உள்ளூர் மீடியாக்காரர்கள் சிலருக்கு இந்த ரகசிய தகவல் கசிந்துள்ளது. அவர்கள் பேட்டியெடுக்க ராணுவ முகாம்களை சுற்றிவர ஆரம்பித்துவிட்டனர்.
திசை திருப்பி அதிரடி
மீடியாக்கள் இந்த தகவலை கசியவிட்டால், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் ராணுவம் நுழையும்போது ஆபத்துகள் ஏற்பட வாய்ப்பிருப்பதை உணர்ந்த ராணுவம், திடீரென திட்டத்தை நள்ளிரவுக்கு ஒத்திப்போட்டுள்ளது. ராணுவம் தாக்குதலை நடத்த கிளம்பாததை போன்ற தோற்றத்தை மீடியா நிருபர்களிடம் காண்பித்து அவர்களை திசை திருப்பிவிட்டு திடீரென கிளம்பி சென்று தாக்கியுள்ளது ராணுவம்.
பிசகியிருந்தால் கதை முடிந்தது
இவ்வாறு தாமதமாக கிளம்பினாலும், திட்டமிட்டபடி இலக்குகளை அழித்துவிட்டு வெற்றியோடு திரும்பியுள்ளது ராணுவம். இதற்கு ராணுவத்தினர் முழு அளவில் தயார் நிலையில் இருந்ததுதான் காரணம் என்று கூறப்படுகிறது. ஒருவேளை கொஞ்சம் பிசகியிருந்தாலும் இந்திய ராணுவம் பெரும் இழப்பை சந்தித்திருக்கும்.
மும்பையிலும் இதே சர்ச்சை
மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது, மீடியாக்கள் அதை லைவாக ஒளிபரப்பியது, பாகிஸ்தானிலிருந்து அந்த தீவிரவாதிகளை வழி நடத்தியோருக்கு ரொம்பவே வசதியாக போனது. உயிர் சேதம் அதிகரித்தது. இதனால் மீடியாக்கள் மீது பெரும் அதிருப்தி பரவியிருந்தது நினைவிருக்கலாம்.