தமிழ்நாட்டுக்கு ஒன்னே ஒன்னு, கேரளாவுக்கு அதுவும் இல்லை- மேற்கு வங்கத்திற்கும் முட்டைதான்
டெல்லி: வடபகுதி மாநிலங்களில் உத்தரப் பிரதேசத்துக்கும் மகாராஷ்டிரத்துக்கும் ஆட்சியில் முக்கியத்துவம் அளித்த மோடி, சில மாநிலங்களை மட்டும் மொத்தமாகவே ஓரம் கட்டிவிட்டார். அதுவும் தமிழ்நாட்டிற்கு "ஒன்னே ஒன்னுதான்" கொடுத்துள்ளார்.
நாட்டின் புதிய பிரதமராக பதவியேற்ற மோடியின் அமைச்சரவையில் உபியும், மகராஷ்டிராவும் அதிக அமைச்சர்களைப் பெற்றிருந்தாலும், ராஜஸ்தான் போன்ற மாநிலங்கள் ஒன்றிரண்டு இடங்களே ஒதுக்கப்பட்டுள்ளன.
ராஜஸ்தான், மபி, குஜராத்துக்கும் கம்மி..
ராஜஸ்தான், உத்தரகாண்ட், மத்திய பிரதேசம், ஹிமாச்சல பிரதேசம், ஜார்க்கண்ட், குஜராத் மற்றும் சண்டிகர் ஆகியவை மோடியின் அமைச்சரவையில் குறைந்த இடங்களையே பெற்றுள்ளன.
கேரளா, மேற்கு வங்காளத்திற்கு முட்டை..
மேலும், மிகப்பெரிய மாநிலங்களில் இடம்பெற்றுள்ள கேரளா மற்றும் மேற்கு வங்காளத்திற்கு ஒரு இடம் கூட மோடி அமைச்சரவையில் கிடைக்கவில்லை என்பது வருத்தத்துக்குரிய ஒன்றாகும்.
தமிழகத்தில் “ஒன் மேன் ஷோ”...
தமிழ்நாட்டைப் பொறுத்த வரை "ஒன் மேன் ஷோ"வாக பாஜகவின் பொன்.ராதாகிருஷ்ணன் அமைச்சர் பதவி பெற்றுள்ளார். இதே நிலையில்தான் ஆந்திராவும் இடம்பிடித்துள்ளது.
10 வருடத்தில் பெரும் சரிவு...
தமிழ்நாடு கடந்த பத்தாண்டுகளாக அமைச்சரவை 'கொள்முதலில்' கொடிக்கட்டிப் பறந்த மாநிலமாக இருந்து வந்தது. ஆனால், இந்த முறையோ மிகக் குறைவான பங்களிப்பையே பெற்று, இதுவரை அமைக்கப்பட்ட அமைச்சரவைகளிலேயே மிகக் குறைந்த இடம் மோடியின் ஆட்சியில்தான் என்ற பெயரைப் பெற்றுள்ளது.
எனினும், அமைச்சரவை விரிவாக்கம் நடைபெற்றால் இவற்றிற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகத்தான் தெரிகின்றது. மொத்தத்தில், இந்த ஒதுக்கப்பட்ட மாநிலங்களும் அமைச்சரவையில் இடம் பெறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.