மும்பை விமான நிலையத்தின் மீது பறந்த மர்ம பொருள்... சீன லாந்தர் விளக்குகள் ஏற்படுத்திய பரபரப்பு
மும்பை: விமான நிலையத்தின் மீது மர்ம பொருள் பறந்ததால், பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டது.
கடந்த சனிக்கிழமை மும்பை விமான நிலையத்தின் மீது 5 பாராசூட்கள் போன்ற உருவத்தில் மர்ம பொருட்கள் பறந்தன.

இவற்றை ஜெட் ஏர்வேஸ் விமானி ஒருவர் கண்டு கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்துள்ளார். இதையடுத்து, விமானங்கள் பறக்க அனுமதிக்கப்படவில்லை.
இது குறித்து விமான போக்குவரத்துறை பாதுகாப்பு நிறுவன அதிகாரிகள் மற்றும் போலீசார் உடனடியாக விசாரணை நடதவில்லை. விஷயம் விஸ்வரூபமெடுத்ததும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.
அப்போது, விமான நிலையத்திற்கு அருகில் உள்ள ஜூகு கடற்கரையில் இருந்து சீன லாந்தர் விளக்குகள் பறக்கவிடப்பட்டதாகவும், அது திசை மாறி விமானங்கள் பறக்கும் பகுதிக்குள் நுழைந்து விட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனினும் தீவிரவாத தாக்குதல்கள் அச்சுறுத்தி வரும் மும்பையில் இது போன்ற மர்ம பொருட்கள் பறப்பதை தடை செய்ய போலீசார் மற்றும் விமான போக்குவரத்துத் துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications