மன்மோகன், சோனியா, அத்வானி.... மின், குடிநீர் கட்டணம் கட்டாத 300 'பெருந்தலைகள்'!!
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பாரதிய ஜனதா கட்சி மூத்த தலைவர் அத்வானி உள்பட 300-க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், மின் கட்டணம், குடிநீர் கட்டணம் ஆகியவற்றைச் செலுத்தாதோர் பட்டியலில் உள்ளதாக டெல்லி மாநகராட்சி தெரிவித்தது.

இதுகுறித்து டெல்லி மாநகராட்சி அதிகாரிகள் கூறியுள்ளதாவது:
முன்னாள் பிரதமர்கள் மன்மோகன் சிங், தேவ கவுடா , மத்திய அமைச்சர்கள் ஸ்மிருதி இரானி, நஜ்மா ஹெப்துல்லா, ராம்விலாஸ் பாஸ்வான், மத்திய முன்னாள் அமைச்சர் ஜெய் நாராயண் பிரசாத் நிஷாத், சோனியா காந்தி, எல்.கே.அத்வானி, திக்விஜய் சிங், ஜெகதீஷ் டைட்லர் உள்பட 166 லோக்சபா எம்.பி.க்களும் 151 ராஜ்யசபா உறுப்பினர்களும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை குடிநீர் மற்றும் மின்சாரக் கட்டணங்களைச் செலுத்தாமல் உள்ளனர்.
நிஷாத் ரூ.18.47 லட்சமும், தேவ கவுடா ரூ.1.49 லட்சமும், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ரூ.1.27 லட்சமும் வரி பாக்கி செலுத்தாமல் உள்ளதால் இந்தப் பட்டியலில் முன்னிலையில் உள்ளனர்.
மன்மோகன் சிங் ரூ.22,934-ம், அத்வானி ரூ.3,311-ம், ஸ்மிரிதி இரானி ரூ.12,934-ம், நஜ்மா ஹெப்துல்லா ரூ.1,627-ம் வரி பாக்கி வைத்துள்ளனர்.
சோனியா மற்றும் ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர் மிகக் குறைவான தொகையாக முறையே ரூ.193, ரூ.206 வரி பாக்கி வைத்துள்ளனர்.
இந்த நிலுவைத் தொகைகளை செலுத்தக் கோரி சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications