மோடி அரசுக்கு அதிகார பேராசை.. சோனியா கடும் தாக்கு !
மும்பை: அதிகாரத்தின் மீதான பேராசையால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை மோடி அரசு கவிழ்க்கிறது என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் நான்டெட் பகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் சங்கர்ராவ் சவான் சிலை மற்றும் அவரது பெயரிலான நினைவு நூலகத்தை திறந்து வைத்து சோனியா காந்தி பேசுகையில், மோடி அரசை கடுமையாக விமர்சனம் செய்தார்.

மேலும் அவர் பேசியதாவது: அருணாச்சல பிரதேசம், உத்தரகாண்ட் உட்பட மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசை அதிகாரத்தின் மீதான பேராசையால் மோடி அரசு கவிழ்க்கிறது. உச்சநீதிமன்றம் நமது அரசியல் சாசனத்தையும் ஜனநாயகத்தையும் காப்பாற்றியுள்ளது நமக்கு பெருமையளிக்கிறது.
மன்மோகன் தலைமையிலான முந்தைய காங்கிரஸ் அரசில் விவசாயிகள் மற்றும் ஏழை மக்கள் நலனுக்காக கொண்டு வரப்பட்ட திட்டங்களை மத்திய அரசு நீர்த்து போக செய்கிறது. நாட்டில் வறட்சி நிலவுகிறது என்பதை மோடி அரசு நினைவில் கொள்ள வேண்டும்.
மத்திய அரசின் கொள்கையால், விவசாயிகள் சுமைகளை தாங்க வேண்டியவர்களாக மாறியுள்ளனர். பெரு முதலாளிகளுக்கு கோடிக்கணக்கில் கடன் வழங்கியுள்ள மத்திய அரசு விவசாயிகளை கண்டுகொள்ளவில்லை என சோனியா தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications