நாகா அமைதி ஒப்பந்தம்.. சோனியா சொல்வதைப் போல வடகிழக்கு மாநில முதல்வர்கள் எதிர்க்கிறார்களா?
டெல்லி: நாகாலாந்து அமைதி ஒப்பந்தத்தை வடகிழக்கு மாநில முதல்வர்கள் எதிர்ப்பதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறுவதை காங்கிரஸ் ஆளும் அருணாச்சல பிரதேச முதல்வரே நிராகரித்திருப்பதாக பாரதிய ஜனதா கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கியது முதலே காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருவதால் சபை நடவடிக்கைகள் முடங்கியுள்ளன. இதனிடையே பிரதமர் மோடி முன்னிலையில் நாகாலாந்து அமைதி ஒப்பந்தம் உருவானதாக அறிவிக்கப்பட்டது.

இதற்கும் காங்கிரஸ் தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்த ஒப்பந்தம் தொடர்பாக மணிப்பூர், அருணாச்சலப் பிரதேசம் மற்றும் அஸ்ஸாம் முதல்வர்களுடன் பிரதமர் கலந்து ஆலோசிக்கவில்லை எனக் கூறி இருந்தனர்.
இந்த ஒப்பந்தத்தால் இம்மாநிலங்கள் பாதிக்கப்படும் எனவும் அவர்கள் குற்றம்சாட்டியிருந்தனர்.
ஆனால் சோனியா காந்தியின் இந்த குற்றச்சாட்டை மறுக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அருணாச்சல பிரதேச முதல்வர் நாபம் துகி, நாகலாந்து அமைதி ஒப்பந்தத்தை வரவேற்று தமது ட்விட்டர் பக்கத்தில் கருத்தை பதிவு செய்திருந்தார். பின்னர் அதை நீக்க வேண்டிய நிர்பந்தத்துக்கு அவர் ஆளானார்;
ஆகையால் வடகிழக்கு மாநில முதல்வர்களை தங்களது அரசியல் லாபத்துக்காக சோனியா பயன்படுத்த முயற்சிக்கிறார் என்கிறது பா.ஜ.க.
மேலும் இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்படுவதற்கு முன்னரே ஜூலை 15-ந் தேதியன்று வடகிழக்கு மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை நடத்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது; இதில் காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்கள் பங்கேற்காமல் புறக்கணித்தனர் என்றும் பா.ஜ.க. வட்டாரங்கள் சுட்டிக் காட்டுகின்றன.












Click it and Unblock the Notifications