மருத்துவ பரிசோதனைக்காக சோனியா காந்தி வெளிநாடு பயணம்!
மருத்துவ பரிசோதனைக்காக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வெளிநாட்டுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
டெல்லி: உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மருத்துவ பரிசோதனைக்காக வெளிநாடு புறப்பட்டு சென்றார்.
கடந்த சில மாதங்களாக சோனியா காந்தியின் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தது. கடந்த ஆண்டு வாரணாசியில் வாகன பேரணி நடத்தியபோது திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. அப்போது உடனே டெல்லிக்கு விமானத்தில் அழைத்து செல்லப்பட்டு, ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து சர் கங்காராம் மருத்துவமனையிலும் சோனியா சிகிச்சை பெற்றார். அண்மைக்காலமாக பொது நிகழ்ச்சிகளை சோனியா காந்தி தவிர்த்தே வந்தார்.
தற்போதைய 5 மாநில சட்டசபை தேர்தலிலும் கூட சோனியா காந்தி பிரசாரம் செய்யவில்லை. இந்நிலையில் சிகிச்சைக்காக சோனியா காந்தி வெளிநாடு புறப்பட்டுச் சென்றுள்ளார்.
இருப்பினும் அவர் எந்த நாட்டுக்குச் சென்றார் என்ற தகவல் வெளியிடப்படவில்லை. முன்னர் அமெரிக்காவில்தான் சோனியா காந்தி சிகிச்சை பெற்றார். ஆகையால் அமெரிக்காவுக்கே சோனியா சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது.