சுழற்றி அடித்த காற்று: சோனியா காந்தி சென்ற விமானம் அவசரமாக தரையிறக்கம்
ஆக்ரா: மோசமான வானிலை காரணமாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சென்ற விமானம் ஆக்ராவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உத்தர பிரதேசத்தில் நடந்த பல்வேறு பிரச்சாரக் கூட்டங்களில் கலந்து கொண்டு பேசினார். அதன் பிறகு அவர் விமானம் மூலம் டெல்லிக்கு கிளம்பினார். ஆனால் அப்போது டெல்லியில் வானிலை மோசமாக இருந்தது. இதையடுத்து அவர் சென்ற விமானம் ஆக்ராவில் உள்ள கேரியா விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது.
ஆக்ராவில் அந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் இருந்து இறங்கிய சோனியா விமான நிலையத்தில் இருந்த விஐபிக்கள் அறையில் சுமார் ஒரு மணிநேரம் காத்திருந்தார். டெல்லியில் வானிலை சரியான பிறகு அவர் விமானம் மூலம் தலைநகருக்கு கிளம்பிச் சென்றார்.
டெல்லியில் புழுதிக்காற்று பலமாக வீசியதால் சோனியா சென்ற விமானத்தால் தரையிறங்க முடியாமல் போனது. இதனால் தான் விமானம் ஆக்ராவுக்கு திருப்பிவிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.