நமக்குத் தெரியாமல் நாட்டின் பெயரைக் கூட பாஜக மாற்றிவிடும்... மம்தா பானர்ஜி 'பொளேர்’
நமது நாட்டின் பெயரைக் கூட பாஜகவினர் நமக்குத் தெரியாமல் மாற்றிவிடுவார்கள் என சாடியுள்ளார் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி.
கொல்கத்தா: நாட்டின் பெயரைக் கூட பாஜகவினர் நமக்குத் தெரியாமல் மாற்றிவிடுவார்கள் என்று மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி கடுமையாக விமர்சித்துள்ளார்.
தாஜ் மஹால் நமது இந்திய வரலாற்றில் ஒரு கறை' என்று பாஜக எம்.எல்.ஏ. சங்கீத் சோம் கருத்து தெரிவித்து இருந்தார். இதுபற்றி மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு அளித்த பதில்:
இது ஏதோ ஒரு எம்.எல்.ஏ.வின் தனிப்பட்ட கருத்து அல்ல. இதுதான் பாரதிய ஜனதா கட்சியின் அரசியல் கொள்கை. தற்போது அது வெளிப்படையாகத் தெரிகிறது.

ஒரு நாட்டின் நினைவுச் சின்னத்தை எப்படி மதத்தின் பெயரால் அந்த நாட்டின் வரலாற்றில் இருந்து பிரிக்க முடியும். மிகவும் தவறான பாதையில் பா.ஜ.க பயணிக்கிறது.
இங்கு நடப்பது சர்வாதிகார ஆட்சி. பலதரப்பட்ட மக்கள் தங்கள் வேற்றுமைகளைக் கடந்து ஒற்றுமையாக வாழ்ந்து வரும் நாட்டில் தற்போது இந்தக் கருத்து தேவையற்றது. இதுபோன்று கருத்து தெரிவிப்பவர்களை நாம் விலக்கி வைக்கவேண்டும். கூடிய விரைவில் நமக்குத் தெரியாமல் நமது நாட்டின் பெயரைக் கூட இந்த ஆட்சியாளர்கள் மாற்றிவிடுவார்கள்.
நாட்டின் முன்னேற்றத்திற்காக ஏதாவது செய்வார்கள் என்று பார்த்தால் இவர்கள் பிரச்னையை தூண்டிவிடுகிறார்கள். இவ்வாறு மமதா கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications