தென் ஆப்ரிக்க பெண் எழுத்தாளர் ஸனப்பிரியா மனநல மருத்துவமனையில் அனுமதி
மும்பை: சல்மான் ருஷ்டியின் எழுத்துகளை மெச்சுவதாக கூறியதற்காகத் தாக்குதலுக்கு உள்ளான தென்னாப்பிரிக்க பெண் எழுத்தாளர் ஸனப் பிரியா டாலா மன நல மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவர், கடந்த மாதம் நடைபெற்ற இலக்கியப் பயிலரங்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது, சல்மான் ருஷ்டியின் எழுத்துகளைத் தான் மெச்சுவதாகக் கருத்து தெரிவித்தார்.
இதையடுத்து அவர் மீது செங்கல் வீச்சு நடந்தது. அவரது கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியதாகவும் செய்திகள் வெளியாகின.

சல்மான் ருஷ்டி எழுதிய நாவல் உலகெங்கும் உள்ள முஸ்லிம்களின் எதிர்ப்புக்கு உள்ளானது. இதையடுத்து, பல ஆண்டுகள் பிரிட்டன் காவல் துறையினரின் பாதுகாப்பில் ருஷ்டி மறைவு வாழ்க்கை வாழ்ந்தார்.
அவருடைய எழுத்துகளைப் பாராட்டுவதாக தென்னாப்பிரிக்க பெண் எழுத்தாளர் ஸனப் பிரியா டாலா கூறியதும், பயிலரங்குக்கு வந்த பல ஆசிரிய, ஆசிரியைகளும், மாணவர்களும் அரங்கைவிட்டு வெளியேறினர். பின்னர் அவர் மீது தாக்குதலும் நடந்தது.
இதனிடையே ஸனப் ப்ரியா டாலா மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக சர்வதேச எழுத்தாளர் அமைப்பான பென் அமெரிக்கன் சென்டர் தெரிவித்தது. இந்தச் செய்தியை உறுதி செய்து கொள்ள முடியாமல் இருந்தது.
இந்த நிலையில், அவரே வெளியிட்டுள்ள கட்டுரைப் பதிவில் அதனை உறுதி செய்தார். வீட்டில் இருக்கும்போது அவருக்குத் தொடர்ந்து தொந்தரவு தரப்பட்டு வந்ததாகவும், மதத் தலைவர் ஒருவரின் ஆலோசனையைப் பெற்றதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
ருஷ்டியின் எழுத்துகள் தன்னைக் "குழப்புவதாக" அவர் கூறிய ஆங்கிலச் சொல்லை, "மெச்சுதல்" எனத் தவறுதலாக ஒரு பத்திரிகையாளர் திரித்தார் என்றும் ஸனப் தனது சுட்டுரையில் தெரிவித்தார்.
ஸனப் பிரியா டாலா ஓர் உளவியல் மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதிர்ச்சிக்குப் பிந்தைய அழுத்தத்துக்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.












Click it and Unblock the Notifications