ஒப்பந்த அடிப்படையில் இந்திய ரூபாய் நோட்டுகள் சீனாவில் அச்சடிக்கப்படுகிறதா?.. மத்திய அரசு மறுப்பு
இந்திய ரூபாய் நோட்டுகள் சீனாவில் அச்சடிக்கப்படுகிறது என்பது ஆதாரமற்ற குற்றச்சாட்டு என மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
Recommended Video
டெல்லி: இந்திய ரூபாய் நோட்டுகள் ஒப்பந்த அடிப்படையில் சீனாவில் அச்சடிக்கப்படுவதாக செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து காங்கிரஸ் எம்பி சசிதரூர் கேள்வி எழுப்பினார். இதற்கு மத்திய அரசு ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டு என்று மறுப்பு தெரிவித்துள்ளது.
அண்மையில், சவுத் சீனா மார்னிங் போஸ்ட் என்ற செய்தித்தாள் வெளியிட்ட செய்தி இந்தியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த செய்தி என்னவென்றால், இந்தியா, நேபாளம், இலங்கை, பங்களாதேஷ், மலேசியா, பிரேஸில் உள்ளிட்ட நாட்டு அரசுகளுக்கு ரூபாய் நோட்டுகளை சீனா அச்சடித்து தருகிறது என்று செய்தி வெளியிட்டது.
சீனாவில் பல நாட்டு ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதை சீன வங்கி நோட்டு அச்சடிக்கும் மிண்ட்டிங் கார்ப்பரேஷன் உறுதி செய்துள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு சீனா நேபாளத்திடமிருந்து ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பதற்கான ஒப்பந்தத்தைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்திய ரூபாய் நோட்டுகள் சீனாவில் அச்சடிக்கப்படுவதாக செய்தி வெளியானதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் எம்பியுமான சசிதரூர் அதிர்ச்சி தெரிவித்துள்ளார். இது குறித்து சசிதரூருர் குறிப்பிடுகையில், இந்த செய்தி உண்மையானால் இது தேசப் பாதுகாப்புக்கு ஆபத்தாகும். இது குறித்து மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் விளக்கம் அளிக்க வேண்டும் என்று டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
சீன நிறுவனம் இந்தியாவுக்கு ஒப்பந்த அடிப்படையில் ரூபாய் நோட்டுகளை அச்சடித்து தருவதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து நிதி அமைச்சகம் தெரிவிக்கையில், எந்த சீன நிறுவனமாவது இந்திய ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் ஒப்பந்தத்தை பெற்றிருப்பதாகக் கூறினால் அது முற்றிலும் அடிப்படை ஆதாரமற்றது என்று மறுப்பு தெரிவித்துள்ளது.
இந்திய பொருளாதார விவகாரங்கள் துறை செயலர் சுபாஷ் சந்திர கார்க் கூறுகையில், "இந்திய ரூபாய் நோட்டுகளை இந்திய அரசாங்கமும் ரிசர்வ் வங்கி அச்சகமும்தான் அச்சடிக்கும்" என்று தெரிவித்துள்ளார்.