"பாகிஸ்தான் வாழ்க, மோடி ஒழிக"- கோஷம் போட்ட சமாஜ்வாதி கட்சிக்காரர் மீது தேசத் துரோக வழக்கு
லக்னொ: பாகிஸ்தான் வாழ்க என்றும், பிரதமர் நரேந்திரமோடியை ஒழிக என்றும் கோஷம்போட்ட சமாஜ்வாதி, கட்சி பிரமுகர் கைது செய்யப்பட்டார். உத்தரபிரதேச மாநிலம் ஜின்ஜானா நகரை சேர்ந்தவர் மெக்மூத் ஆலம். சமாஜ்வாதி கட்சி பிரமுகர்.
இவர் மீரட்-கர்னால் பகுதிகளுக்கு இடைப்பட்ட நெடுஞ்சாலையில் நின்றபடி, அவ்வழியாக செல்வோரை மிரட்டி, கட்சிக்கு நிதி திரட்டுவதாக கூறி, பணம் பறித்துக்கொண்டிருந்தார். இதை கேள்விப்பட்ட போலீசார், விரைந்து வந்து அவரை கைது செய்ய முற்பட்டனர்.
ஆனால், தன்னை ஆளும்கட்சி பிரமுகர் என்று கூறி போலீசாரை மிரட்டியுள்ளார் மெக்மூத் ஆலம். இருப்பினும், போலீசார் இதை காதில் போட்டுக்கொள்ளாமல் இவரை இழுத்துச் செல்ல முற்பட்டபோது, திடீரென 'பாகிஸ்தான் வாழ்க', 'நரேந்திரமோடி ஒழிக' என்று கோஷம் போட்டுள்ளார். இதனால் மேலும் ஆத்திரமடைந்த போலீசார், அவரை இழுத்து சென்று போலீஸ் நிலையத்தில் அடைத்தனர்.
பொதுமக்களை மிரட்டி பணம் பறித்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், பாகிஸ்தான் குறித்தும், பிரதமர் குறித்தும் மெக்மூத் கூறிய கருத்து, போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு எதிராக தேசத்துரோக வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கும்படி உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
இந்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.