உ.பியில் 58% வாக்குகள் பதிவு- மோடி அலையெல்லாம் எதுவும் இல்லை: முலாயம் சிங்
லக்னோ: லோக்சபா தேர்தலில் மோடி அலையெல்லாம் எதுவும் வீசவில்லை; அது குஜராத்தில் மட்டுமே இருக்கலாம் என்று சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம்சிங் கூறியுள்ளார். உத்தரப்பிரதேசத்தில் இன்று நடைபெற்ற தேர்தலில் மாலை 6 மணிவரை 58% வாக்குகள் பதிவாகி இருந்தன.
உத்தரபிரதேசத்தில் 12 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது, மூன்றாவது கட்டமாக நடக்கும் இத் தேர்தலில் சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ் உட்பட 188 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.
21 ஆயிரத்து 946 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. 94.806 தேர்தல் அதிகாரிகள் தேர்தல் பணியில் ஈடுபட்டனர்.
முதல் இரண்டு கட்டங்களில் 21 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. மக்களவையில் உத்தரபிரதேசத்தின் பங்கு மிகப்பெரிய அளவிலானது இம்மாநிலத்தில் இருந்து 80 பிரதிநிதிகள் தேர்தெடுக்கப்படுகின்றனர்.
இந்நிலையில் இன்று 3ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் மாலை 6 மணி வரை 58% வாக்குகள் பதிவாகி இருந்தன.
முலாயம் கருத்து
மைன்புரி தொகுதியில் சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவ் வாக்களித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய முலாயம்சிங் யாதவ், மோடிக்கு குஜராத்தில் மட்டும்தான் செல்வாக்கு.. அதைத்தாண்டி இந்தியாவில் வேறு எங்கும் அவருக்கு எந்த செல்வாக்கும் இல்லை என்றார்.
அகிலேஷ் யாதவ்
இதேபோல் வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உத்தரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ். தேர்தலில் யார் வெல்கிறார்கள்? தோற்கிறார்கள் என்பது பற்றி கவலை இல்லை. நிச்சயமாக நாங்கள் அதிக இடங்களைக் கைப்பற்றுவோம் என்றார்.