சொத்துக் குவிப்பு வழக்கு: ஜெ. மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை ஜன.5-க்கு ஒத்திவைப்பு!
பெங்களூரு: வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கில் விதிக்கப்பட்ட 4 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்பட 4 பேர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை வரும் 5-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கடந்த 1991 முதல் 1996 வரை முதல்வராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக ரூ.66.64 கோடி சொத்து சேர்த்ததாக அவர் மீது ஜனதா கட்சி தலைவராக இருந்த சுப்ரமணியன் சாமி புகார் கொடுத்தார். அந்த புகார் மனு மீது விசாரணை நடத்திய நீதிமன்றம் ஜெயலலிதா மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தும்படி தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டது.

அதையேற்று போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியபின் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரை குற்றவாளியாக வழக்கில் சேர்த்து குற்றபத்திரிகை தாக்கல் செய்தது. கடந்த 1997 முதல் 2004 வரை சென்னையில் அமைக்கப்பட்ட தனி நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது.
உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் இந்த வழக்கு பெங்களூருக்கு மாற்றம் செய்யப்பட்டு 2005 முதல் நடந்து வந்தது. பின் இந்த வழக்கில் கடந்தாண்டு செப்டம்பர் 27-ந் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதில் ஜெயலலிதா உள்பட 4 பேரையும் குற்றவாளி என்று தீர்ப்பளித்த நீதிபதி ஜான் மைக்கல் குன்ஹா, 4 பேருக்கும் 4 ஆண்டு சிறை தண்டனையும் ஜெயலலிதாவுக்கு ரூ 100 கோடி அபராதமும், மற்ற 3 பேருக்கு தலா ரூ10 கோடி அபராதமும் விதித்தார். அதை தொடர்ந்து குற்றவாளிகள் பெங்களூரு பரப்பன அக்ரஹார மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஜெயலலிதா உள்பட 4 பேரும் ஜாமீனில் விடுதலை செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை விசாரணை நடத்திய தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான பெஞ்ச், கடந்தாண்டு அக்டோபர் 17ந் தேதி இடைக்கால நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்ததுடன், வழக்கு தொடர்பான ஆவணங்களை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும்படி குற்றவாளிகளுக்கு உத்தரவிட்டது.
இதனை ஏற்று டிசம்பர் 8- ந் தேதி குற்றவாளிகள் தரப்பில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதனிடையே இவ்வழக்கு கடந்த டிசம்பர் 18-ந் தேதி உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி எச்.எல். தத்து தலைமையிலான பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தபோது, ஜெயலலிதா உள்பட 4 பேர் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க தனி பெஞ்ச் ஏற்படுத்த வேண்டும். அந்த பெஞ்ச் தினமும் விசாரணை நடத்தி 3 மாதங்களில் வழக்கை முடித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
உச்ச நீதிமன்ற உத்தரவு கர்நாடக உயர் நீதிமன்றத்துக்கு கிடைத்ததை தொடர்ந்து ஜெயலலிதா மீதான வழக்கை விசாரணை நடத்த புதிய நீதிபதியாக சி.ஆர்.குமாரசாமியை நியமனம் செய்து தலைமை நீதிபதி டி.எச்.வகேலா நேற்று உத்தரவிட்ட்டார்.
5-ந் தேதிக்கு ஒத்திவைப்பு
இதனைத் தொடர்ந்து ஜெயலலிதா உள்ளிட்டோரின் மேல்முறையீட்டு மனு இன்று கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நீதிபதி குமாரசாமி விடுப்பில் இருப்பதால் நீதிபதி பில்லியப்பா இந்த மனு மீது விசாரணை நடத்தினார்.
அப்போது ஜெயலலிதா தரப்பில், வழக்கை 12-ந் தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் இதனை நிராகரித்த நீதிபதி பில்லியப்பா, இந்த மனு மீதான விசாரணையை வரும் 5-ந் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
தற்போது விடுப்பில் இருக்கும் நீதிபதி குமாரசாமி, வரும் 5-ந் தேதியன்று பணிக்குத் திரும்புகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications