மீனவர் பிரச்சினையை மனிதாபிமானத்துடன் அணுகுங்கள்: இலங்கை பிரதமரிடம் மோடி வேண்டுகோள்
டெல்லி: இந்தியா வந்துள்ள இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, பிரதமர் நரேந்திர மோடியை இன்று மதியம் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதன்பிறகு இருவரும் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர்.
3 நாள் பயணமாக நேற்று இரவு இந்தியா வந்தடைந்தார் இலங்கை பிரமதர் ரணில் விக்ரமசிங்கே. டெல்லியிலுள்ள ஹைதராபாத் மாளிகையில் இன்று மதியம், பிரதமர் மோடியை சந்தித்தார்.
சந்திப்புக்கு பிறகு நண்பகல் 1 மணியளவில், இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது மோடி கூறியதாவது: இரு நாட்டு வர்த்தக உறவுகள் குறித்தும், மீனவர் பிரச்சினை குறித்தும் ஆலோசித்தோம். மீனவர்கள் பிரச்சினையை மனிதாபிமான அடிப்படையில் அணுகுமாறு இந்தியா சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்திய மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக மீன்பிடிக்க வருகிறார்கள் என்பதை கவனத்தில் வைக்குமாறு வலியுறுத்தப்பட்டது.
இரு நாட்டு மீனவர் அமைப்புகளும், தங்களது பேச்சுவார்த்தையை தொடர்ந்து நடத்தி தீர்வு காணப்பட வேண்டும் என்றும் ஒப்புக்கொள்ளப்பட்டது.
இலங்கை அனைத்து துறைகளிலும் வளர்ச்சியடைய வேண்டும் என்பது இந்தியாவின் விருப்பம். அதற்கான அனைத்து உதவிகளையும் இந்தியா செய்யும். இவ்வாறு மோடி தெரிவித்தார்.