கொச்சி துறைமுகத்தில் இலங்கையின் பிரமாண்ட போர்க்கப்பல்கள் முகாம்!!
கொச்சி: கேரளாவின் கொச்சி துறைமுகத்துக்கு 3 நாள் பயணமாக இலங்கையின் 2 பிரம்மாண்ட போர்க்கப்பல்கள் வருகை தந்துள்ளன.
ஈழத் தமிழரை இனப்படுகொலை செய்த இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்; இலங்கை ராணுவத்துக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கக் கூடாது என தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த தமிழக கட்சிகளும் இதைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

ஆனால் மத்திய அரசு தொடர்ந்து இலங்கையை நட்பு நாடு என்று கூறி பயிற்சிகள் அளித்து வருகிறது. ஆனால் இலங்கையோ அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு ஆதரவாக மட்டுமே செயல்பட்டும் வருகிறது.
இந்த நிலையில் இலங்கையில் பிரமாண்ட போர்க் கப்பல்களான எஸ்.எல்.என்.எஸ். சமுத்ர, அதிவேக ஏவுகணைக் கப்பல் எஸ்.என்.எல்.எஸ். நந்திமித்ர ஆகியவை கேரளாவின் கொச்சி துறைமுகத்துக்கு வந்துள்ளன.
இக்கப்பலில் வருகை தந்த இலங்கை கடற்படை அதிகாரிகள் டி.எஸ். டயஸ், செனிவிரத்ன ஆகியோர் இந்திய கடற்படையின் தென்பிராந்திய தலைமை அதிகாரி ஆர்.பி. பண்டிட்டை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இப்போர்க்கப்பலில் வருகை தந்துள்ள இலங்கை கடற்படையினர் இந்திய கடற்படையின் தென்பிராந்திய தலைமையகத்தில் இருக்கும் பயிற்சி வசதிகளை பார்வையிட்டு கூட்டு பயிற்சி மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இக்கப்பல்கள் நாளை கொச்சி துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு புறப்பட்டு செல்லும்.












Click it and Unblock the Notifications