'பப்' தாக்குதல் ஸ்ரீராம் சேனா தலைவர் முத்தலிக்கு கடும் எதிர்ப்பு- உறுப்பினர் சேர்க்கையை நிறுத்தியது
தார்வாட்: பெங்களூர் நகரில் பப்கள் மீது தாக்குதலை நடத்தி பரபரப்பை ஏற்படுத்திய ஸ்ரீராம் சேனாவின் தலைவர் பிரமோத் முத்தலிக்குக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அவரை கட்சியில் சேர்க்கும் நடவடிக்கையை சில மணி நேரத்திலேயே பாஜக நிறுத்தி வைத்துவிட்டது.
2009ஆம் ஆண்டு பெங்களூர் நகரில் பப்கள் மீதும் அதில் நடனமாடிய பெண்கள் மீதும் ஸ்ரீராம்சேனாவினர் திடீர் தாக்குதலை நடத்தி நாடெங்கும் பரபரப்பை ஏற்படுத்தினர். இதேபோல் ஹிந்து கலாசாரம் என்ற பெயரில் பல்வேறு வன்முறை செயல்களில் ஈடுபட்டதாக ஸ்ரீராம் சேனாவின் தலைவர் முத்தலிக் மீது மட்டும் 45 வழக்குகள் பதிவாகி உள்ளன. அத்துடன் கர்நாடகாவின் பல மாவட்டங்களில் போலீசார் அவரை தேடி வந்தனர்.
இந்த முத்தலிக்தான் இன்று ஹூப்லியில் நிகழ்ச்சி ஒன்றில் கர்நாடக முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், பாஜக மாநில தலைவர் பிரஹ்லாத் ஜோஷி உள்ளிட்டோர் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முத்தலிக், நரேந்திர மோடியை பிரதமராக்கவே தாம் பாஜகவில் இணைந்ததாக தெரிவித்தார்.
ஆனால் முத்தலிக்கை கட்சியில் சேர்க்க பாரதிய ஜனதாவில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. கோவா முதல்வர் பகிரங்கமாகவே முத்தலிக்கை பாஜகவில் சேர்க்க எதிர்ப்பு தெரிவித்தார். இதைத் தொடர்ந்து முத்தலிக் கட்சியில் சேர்ந்த சில மணி நேரங்களிலேயே அவரது உறுப்பினர் சேர்க்கையை இடை நிறுத்தம் செய்ய பாஜக முடிவு செய்தது.












Click it and Unblock the Notifications