சத்ய சாய்பாபாவின் 100வது பிறந்தநாள் கொண்டாட்டம்.. லேசர் ஷோவால் புட்டபர்த்தியில் பரவசமான பக்தர்கள்!
புட்டபர்த்தி: சத்ய சாய்பாபாவின் 100வது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அவரின் அமைதி, சேவை, அன்பு ஆகிய 3 நெறிகளையும் முன்னிலைப்படுத்தி அரங்கேற்றப்பட்டு வரும் லேசர் ஷோ பக்தர்களை பரவசம் அடைய செய்துள்ளது. இதன் காரணமாக புட்டபர்த்தி முழுவதும் சாய் ராம் என்ற கோஷம் விண்ணைப் பிளக்கிறது.
பகவான் ஸ்ரீசத்ய சாய்பாபாவின் 100வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம் ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் சிறப்பாக நடந்து வருகிறது. உலகம் முழுவதும் உள்ள 140 நாடுகளில் இருந்து பக்கர்கள் பகவானை அருள் நாடி புட்டபர்த்தி வருகின்றனர். சாய்பாபாவின் பாதம்பட்ட புனித பூமியில், அவரின் லீலைகளை விளக்கும் வித்தியாசமான லேசர் ஒளிக்காட்சியை பலரையும் வியப்படைய வைத்திருக்கிறது.

இதனால் புட்டபர்த்தி முழுதும் சாய் ராம் என்ற பக்தர்களின் நாமம் விண்ணைப் பிளக்கிறது. அதுமட்டுமல்லாமல் தொடர்ச்சியாக நடந்து வரும் ஆன்மிக நிகழ்ச்சிகளை கண்டு பக்தர்கள் மெய் சிலிர்க்கின்றனர். இதன் ஒரு பகுதியாக சித்ராவதி ஆற்றங்கரையில் நடந்த லேசர் ஷோ பக்தர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஆற்றின் நீரையே திரையாக பயன்படுத்தி, அதில் லேசர் ஒளி பாய்ச்சி, இசையுடன் காட்சிகளை உருவாக்கி பக்தர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுத்து வருகின்றனர். இந்த அற்புத தொழில்நுட்பம் மூலமாக ஆன்மிக நிகழ்ச்சிகள் நடப்பது பக்தர்களுக்கு புதிய அனுபவமாக அமைந்துள்ளது. பகவான் ஸ்ரீசத்ய சாய்பாபாவின் மனிதநேயம், சேவை, மற்றும் ஆன்மீக செய்திகளை ஒளி, இசை, நீர் என மூன்று கூறுகள் ஒன்றிணைந்து உயிரோட்டமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த லேசர் நிகழ்ச்சியை ஆன்மீகக் கொண்டாட்டம் என சொன்னால் கூட மிகையாகாது. இந்த லேசர் நிகழ்ச்சி நவம்பர் 23ஆம் தேதி வரை ஒவ்வொரு நாளும் இரவு 7:30 மணி முதல் இரவு 9:30 மணிவரை நடந்து வருகிறது. அமைதி, சேவை, அன்பு எனும் சாய்பாபாவின் மூன்று நெறிகளும், இந்த ஒளிக்காட்சியின் ஒவ்வொரு துளியிலும் பிரதிபலிப்பதாக பக்தர்கள் நெகிழ்ச்சியுடன் கூறி வருகின்றனர்.

இந்த காெண்டாட்டங்களின் ஒரு பகுதியாக ஸ்ரீசத்ய சாய்பாபா நினைவு தபால் தலை மற்றும் சிறப்பு நாணயம் வெளியிடப்படவுள்ளது. நாளை பிரதமர் மோடியும், நவம்பர் 22ஆம் தேதி குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவும், நவம்பர் 23ஆம் தேதி குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் புட்டபர்திக்கு வர திட்டமிட்டுள்ளனர். இதனால் புட்டபர்த்தியில் பாதுகாப்பு இன்னும் பலப்படுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications