மதமாற்றம் செய்தால் கொன்றுவிடுவோம்.. ரவி சங்கருக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கொலை மிரட்டல்
டெல்லி: வாழும் கலை என்ற அமைப்பின் தலைவர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கருக்கு ஐஎஸ்ஐஎஸ் மற்றும் தெரிக் இ தாலிபான் தீவிரவாத அமைப்புகள் கொலை மிரட்டல் விடுத்துள்ளதை அடுத்து, அவருக்கு அளிக்கப்படும் பாதுகாப்பை பலப்படுத்துமாறு அனைத்து மாநில அரசுகளையும் மத்திய அரசுக் கேட்டுக் கொண்டுள்ளது.
இதுகுறித்து அனைத்து மாநில தலைமைச் செயலர்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பிய சுற்றறிக்கை:
இந்த ஆண்டு மார்ச் மாதம், மலேசியாவுக்கு ரவிசங்கர் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது, அவர் தங்கியிருந்த ஜென் ஹோட்டலின் மேலாளருக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கடிதம் அனுப்பினர்.
அதில், "இந்து மதக் கொள்கைகளை ரவிசங்கர் பரப்ப முயன்றால் அவரைக் கொல்வோம்; ஹோட்டலையும் அழிப்போம். தான் எந்த மதத்தையும் சாராதவர் என்று ரவிசங்கர் கூறினாலும், அவரது வாழும் கலை அமைப்பு ஈராக், ஈரான் நாட்டு முஸ்லிம்களை மதமாற்றம் செய்து வருகிறது' என்று அந்த கடிதத்தில் ஐஎஸ்ஐஎஸ் மிரட்டல் விடுத்திருந்தது.
மேலும், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில் உள்ள வாழும் கலை அமைப்பின் அலுவலகத்தை தலிபான் தீவிரவாதிகள் தீயிட்டுக் கொளுத்தியதாகவும் கூறப்படுகிறது. எனவே, ரவிசங்கர் எந்த மாநிலத்துக்கு வந்தாலும் அவருக்கு முழு பாதுகாப்பை அளிக்க வேண்டும் இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.