திபெத்தியர்களுக்கு தனி ராஜ்ஜியம்.. ஆனால் தாயகத் தமிழர்கள் அகதிகளை விட மோசம்.. கர்நாடக பரிதாபம்!
கர்நாடகாவில் தாயகம் திரும்பிய பல்லாயிரம் தமிழர்கள் பரிதவிக்கின்றனர்.
சுல்லியா: கர்நாடகாவின் சுல்லியா தொகுதியில் இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய ஆயிரக்கணக்கான தமிழர்கள் வீடுகளை இழந்து பரிதவித்து வருகின்றனர். தற்போதைய தேர்தலில் தங்களுக்கு வீடுகளை கட்டித் தருவதாக வாக்குறுதி தரும் கட்சிக்கே வாக்களிப்போம் என்கின்றனர் தமிழர்கள்.
கர்நாடகாவில் கன்னடருக்கு இணையாக தமிழர்கள் காலம் காலமாக வாழ்கின்றனர். ஆனாலும் தமிழர்கள் மீது எப்போதும் ஒருவித வன்மத்துடன்தான் கன்னடர்கள் இருந்து வருகின்றனர்.
அதே கர்நாடகாவில் சுல்லியா தொகுதியில் இலங்கையில் இருந்து 1970களில் தாயகம் திரும்பிய தமிழர்கள் பல்லாயிரக்கணக்கானோர் வசித்து வருகின்றனர். இவர்களது நிலைமை குறித்து குயின்ட் இணையதளம் வெளியிட்டுள்ள செய்தியில் இடம்பெற்றுள்ள தகவல்கள்:
இலங்கையில் குடி உரிமை மறுக்கப்பட்டு இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்ட போது கர்நாடகாவின் சுல்லியா ரப்பர் தோட்டங்களில் பணி வழங்குவதற்கான பரிந்துரை கடிதத்தை அப்போதைய இந்திய தூதரகம் அளித்திருந்தது. இதனடிப்படையில் சுல்லியாவில் தமிழர்கள் குடியேறினர்.
லயன் வீடுகள் எனப்படும் தொகுப்பு வீடுகளில்தான் இந்த தமிழர்கள் வசித்து வருகின்றனர். தாயகம் திரும்பிய தமிழர்களின் முதல் தலைமையினர் பலரும் ஓய்வு பெற்றுவிட்டனர்.
இதுதான் இப்போது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இந்த முதல் தலைமுறை தமிழர்களுக்குத்தான் ரப்பர் தோட்டங்களில் வேலை, தங்க வீடு.. அடுத்த தலைமுறையினருக்கு வேலையும் கிடையாது வீடு கிடையாது என கைவிரித்திருக்கிறது கர்நாடகா அரசு.
தமிழர்கள் வீடுகளில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு அவற்றை கர்நாடகா அரசு கையகப்படுத்துகிறது. தமிழர்கள் இப்போது வீடற்றவர்களாக கர்நாடகாவில் நிர்கதியாக தவிக்கின்றனர். இந்த தேர்தலில் தங்களுக்கு வீடுகள் கட்டித் தருவதாக வாக்குறுதி தரும் கட்சிகளுக்கே வாக்களிப்போம் என்கின்றனர் இத்தமிழர்கள். இங்கு மொத்தம் 10,000 தமிழர் வாக்குகள் உண்டு.
இவ்வாறு குயின்ட் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதே சுல்லியாவில் இருந்து 100 கிமீ தொலைவில் திபெத் அகதிகள் தங்களுக்கென தனி ராஜ்ஜியத்தை கிட்டத்தட்ட ஒரு தனிநாடு போல் அனைத்து வசதிகளுடனும் வாழ்கின்றனர். ஆனால் இந்திய மண்ணில் பிறந்து ஆங்கிலேயர் ஆட்சியில் இலங்கையின் மலையகத்தில் குடியேற்றப்பட்டு அங்கிருந்து சொந்த மண்ணிக்கு விரட்டப்பட்ட தமிழர்களோ வாழ வீடு கூட இல்லாமல் அகதிகளாக தவிக்கின்றனர் என்பது பெரும் வேதனைக்குரியதாகும்.