தமிழகத்தில் விரைவில் திமுக ஆட்சி மலரும்: மு.க.ஸ்டாலின் நம்பிக்கை
தமிழகத்தில் விரைவில் திமுக ஆட்சி மலரும் என மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தார்.
டெல்லி: தமிழகத்தில் விரைவில் திமுக ஆட்சி மலரும் என அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
டெல்லி ராஷ்டிரபதி பவனில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை இன்று மாலை சந்தித்தார் தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின். அவருடன், டி.கே.எஸ்.இளங்கோவன், துரைமுருகன், திருச்சி சிவா, ஆர்.எஸ்.பாரதி ஆகியோரும் சென்றிருந்தனர். சட்டசபையில் தி.மு.கவினர் தாக்கப்பட்டது குறித்தும், ரகசிய வாக்கெடுப்பு நடத்த கோரியும் பிரணாப்பிடம் முறையிட்டார் ஸ்டாலின்.

பின்னர், செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், சட்டசபையில் நாங்கள் இல்லாமல் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பை ரத்து செய்ய மனு கொடுத்துள்ளோம். ரகசிய வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என முறையிட்டோம் எனக் கூறினார்.
அப்போது ஜெயலலிதா அண்ணன் மகன் தீபக் பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணையை ஆரம்பம் முதலே திமுக வலியுறுத்தி வருகிறது. தற்போது தான் ஓ.பன்னீர்செல்வமும், தீபக்கும் கேட்கிறார்கள் என்றும் ஜெயலலிதா குறித்த உண்மைகள் தற்போது தான் வெளி வந்துகொண்டிருக்கின்றன எனவும் கூறினார்.
மேலும் அதிமுக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் குறித்த கேள்விக்கு ஸ்டாலின் பதிலளிக்க மறுத்துவிட்டார். அதிமுக உள்கட்சி விவகாரங்களில் திமுக தலையிடாது. தமிழகத்தில் விரைவில் திமுக ஆட்சி மலரும் என்றார்.












Click it and Unblock the Notifications