பெங்களூருவில் ஐஸ்கிரீம் சாப்பிட சென்ற பெண்களை கடத்த முயற்சி! சமயோஜித புத்தியால் தப்பினர்
பெங்களூரு: ஐஸ்கிரீம் சாப்பிட சென்ற பெண்களின் காரை சூழ்ந்து நின்று அவர்களை கடத்தி செல்ல ஒரு கும்பல் முயன்ற சம்பவம் பெங்களூரு நகரின் மத்திய பகுதியில் நடந்துள்ளது.
பெங்களூருவை சேர்ந்த பிரமிளா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) மற்றும் அவரது குடும்ப பெண் நண்பர்கள் 4 பேர் தங்கள் கணவன்மார்களுடன் சேர்ந்து கப்பன் பார்க் அடுத்த லேவலி ரோட்டிலுள்ள ஹோட்டலில் இரவு உணவு சாப்பிட்டுள்ளனர். இதன்பிறகு ஐஸ்கிரீம் சாப்பிடுவதற்காக பெண்கள் மட்டும் இன்னோவா காரில் எம்ஜிரோடு லேக்வியூ மில்க் பாருக்கு சென்றுள்ளனர்.
காரை டிரைவர் ஓட்டிச் சென்ற நிலையில், உள்ளே ஐந்து பெண்கள் இருந்தனர். ஐஸ்கிரீம் பார்லர் அருகில் பார்க்கிங் செய்ய இடமில்லாத சூழ்நிலையில் சற்று தொலைவில் காரை நிறுத்தியுள்ளனர். ஐஸ்கிரீம்களை ஆர்டர் செய்ய டிரைவர் சென்ற நிலையில், பெண்கள் மட்டும் காருக்குள் இருந்துள்ளனர்.
அப்போது இரவு 11.30 மணி இருக்கும். ஏசி போட்டிருந்ததால் கார் கண்ணாடிகள் முழுவதும் ஏற்றிவிடப்பட்டிருந்தன. அப்போது ஐந்து ஆண்கள் கும்பல் திடீரென காரின் அருகே சூழ்ந்து கொண்டு கார் கதவை திறக்குமாறு கத்தினர். இதனால் பெண்கள் அதிர்ச்சியும், பீதியும் அடைந்தனர். இந்நிலையில், டிரைவர் சீட்டின் அருகேயுள்ள முன் இருக்கையில் அமர்ந்திருந்த பெண் சமயோஜிய புத்தியை பயன்படுத்தி கார் கதவுகளை சென்ட்ரல் லாக் செய்துவிட்டார். இதனால் அந்த கும்பலால் கதவை திறக்க முடியவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த கும்பல் கல்லை எடுத்து வந்து கண்ணாடியை உடைத்துவிடுவதாக மிரட்டி, கதவை திறக்க கூறியுள்ளனர். அவர்கள் கைகளில் கத்தியும் இருந்துள்ளன. இதனால் பயத்தில் பெண்கள் கத்தி கூச்சலிட்டனர், ஒரு பெண் தனது கணவருக்கு போன் செய்தார். மற்றொரு பெண்ணோ நடப்பவற்றை தனது போனில் படம் பிடித்தார். இதனிடையே பெண்களின் சத்தம் அதிகமாகவே, பயந்து போன ஐந்து ஆண்களும் தப்பியோடிவிட்டனர்.
சத்தம் கேட்டு கார் டிரைவரும், ஐஸ்கிரீம் பார்லரின் வாடிக்கையாளர்கள் சிலரும் கார் அருகே ஓடி வருவதற்குள் அந்த கும்பல் தப்பியோடிவிட்டது. இதையடுத்து கப்பன் பார்க் காவல் நிலையத்தில் பெண்கள் ஐந்து பேரும் புகார் அளித்துள்ளனர். வீடியோ காட்சிகளையும் ஆதாரமாக காண்பித்துள்ளனர். அந்த வீடியோவில் சில ஆண்களின் முகம் தெளிவாக பதிவாகியுள்ளது.
இதுகுறித்து போலீஸ் கமிஷனர் எம்.என்.ரெட்டியிடம் கேட்டபோது, போலீசார் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளனர். குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவார்கள் என்றார். பெங்களூரு நகரின் மையப்பகுதியான எம்.ஜி.ரோட்டில் நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.