கும்பமேளாவில் கட்டுக்கடங்காத கூட்டம்.. மூச்சு விட கூட முடியாமல் திணறும் பக்தர்கள்..முக்கிய அறிவிப்பு
லக்னோ: உத்தரபிரதேச மாநில பிரயாக்ராஜில் மகா கும்பமேளா தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 3 நதிகள் சங்கமிக்கும் அங்கு பலர் புனித நீராடி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்தனர். மகா கும்பமேளாவுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் பிப்ரவரி 5ஆம் தேதி வரை கங்கா ஆரத்தி நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று புனித நதிகள் சங்கமிக்கும் இடம் திரிவேணி சங்கமம். திரிவேணி சங்கத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்ப மேளா நிகழ்ச்சி விமரிசையாக நடைபெறும்.

அந்த வகையில் இந்த ஆண்டு மகா கும்பமேளா நிகழ்வை பாஜகவின் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தர பிரதேச அரசு கோலாகலமாக நடத்தி வருகிறது. ஜனவரி 12 ஆம் தேதி தொடங்கிய இந்த மகா கும்பமேளா பிப்ரவரி 26 ஆம் தேதி மகா சிவராத்திரி வரை நடைபெறுகிறது.
இந்தியா முழுவதும் மட்டும் அல்லாது வெளிநாடுகளில் இருந்தும் கூட பக்தர்கள் யோகிகள் சாமியார்கள் அங்கு திரண்டுள்ளனர். இதுவரை கோடி கணக்கானோர் மகா கும்ப மேளாவில் புனித நீராடி இருக்கும் நிலையில் மேலும் பலர் அங்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வரை முப்பது கோடிக்கும் அதிகமான பக்தர்கள் அங்கு சுவாமி தரிசனம் செய்திருக்கிறார்கள்.
மேலும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தொழிலதிபர் கௌதம் அதானி உள்ளிட்ட பலரும் அங்கு சுவாமி தரிசனம் செய்து திரிவேணி சங்கத்தில் புனித நீராடி இருக்கிறார்கள். இந்த நிலையில் தை அமாவாசையை முன்னிட்டு அங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராட குவிந்ததால் கடும் நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி 30க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

தற்போது வார இறுதி மற்றும் பண்டிகை நாட்கள் காரணமாக கும்பமேளாவுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் கங்கை படித் துறையில் பிரம்மாண்டமாக நடத்தப்படும் கங்கா ஆராத்தி ஐந்தாம் தேதி வரை நிறுத்தப்படுவதாக கங்கா சேவா நிதி அறிவித்திருக்கிறது. மேலும் ஷீத்லா படித் துறை, அஸ்ஸி படித் துறை ஆகிய படித் துறைகளில் ஆரத்தி நிகழ்ச்சியை நடத்த வேண்டாம் எனவும் அந்த அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது. ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட்ட நெரிசலில் சிக்கி பலர் பலியான நிலையில் தற்போது மேலும் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதால் கூட்ட நெரிசல் ஏற்படும் வாய்ப்புள்ளது என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications