என்னதான் இணைந்தாலும் அதிமுகவில் இன்னமும் கசப்புணர்வு இருக்கிறது... கே.பி.முனுசாமி 'ஓபன் டாக்’
நாங்கள் 100% இணைந்தாலும் அதிமுகவில் இன்னமும் கசப்புணர்வு இருக்கிறது என்று ஓபிஎஸ் ஆதரவாளர் கே.பி. முனுசாமி ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி: அதிமுகவில் இரு அணிகளும் 100% இணைந்த போதும் இன்னமும் சிலரிடம் மனக்கசப்பு இருக்கவே செய்கிறது என்றும் அந்த மனக்கசப்புகள் விரைவில் முடிவுக்கு வரும் என்றும் ஓபிஎஸ் ஆதரவாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.முனுசாமி வெளிப்படையாகவே பேசியிருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது.
டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் கேபி முனுசாமி கூறியதாவது:

நாங்கள் 100% இணைந்திருந்தாலும் கூட அதிமுகவில் இன்னமும் சிலரிடம் மனக்கசப்பு இருக்கவே செய்கிறது. அதிமுகவில் இருக்கும் மனக்கசப்புகள் விரைவில் முடிவுக்கு வரும்.
காலப்போக்கில் கட்சிக்குள் நிலவும் கசப்புணர்வு நீங்கும். இரட்டை இலை சின்னம் எங்களுக்கே கிடைக்கும். சமாஜ்வாதி கட்சிக்கான தீர்ப்பையொட்டி நான் உறுதியாக கூறுகிறேன் இரட்டை இலை சின்னம் எங்களுக்குத்தான்.
சசிகலா அணியினர் பொய்யான ஆவணங்களை சமர்ப்பித்துள்ளதால் இந்த யுத்தத்தில் நாங்கள் வெற்றி பெறுவது உறுதியான ஒன்று. பொதுக்குழுவின் சி.டி. உள்ளிட்ட ஆவணங்கள் ஆணையத்திடம் அளிக்கப்பட்டுள்ளன.
பொதுவாழ்வில் இருப்போருக்கு சகிப்புத்தன்மை அவசியம். மெர்சல் விவகாரத்தில் ஆர்வ கோளாறில் தமிழக பாஜக தலைவர்கள் பேசுகின்றனர். தமிழக பாஜக தலைவர்கள் பேசுவதற்கும் பிரதமர் மோடிக்கும் முடிச்சு போட கூடாது.
இவ்வாறு கேபி முனுசாமி கூறினார்.












Click it and Unblock the Notifications