ஜப்பானுக்குப் போய் டிரம்ஸ் வாசிப்பதால் ஒரு புண்ணியமும் இல்லை.. மோடிக்கு ராகுல் "கொட்டு"!
அமேதி: பிரதமர் நரேந்திர மோடி உள்நாட்டுப் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டும். உள்நாட்டுப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும். அதை விட்டு விட்டு ஜப்பானுக்குப் போய் டிரம்ஸ் வாசிப்பதால் ஒரு பிரயோஜனமும் இல்லை என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
தனது தொகுதியான அமேதிக்கு வந்த ராகுல் காந்தி அங்கு பேசுகையில், இங்கே பல பிரச்சினைகள் மக்களை வாட்டி வதைத்து வருகின்றன. மின்சாரம் இல்லை. விலைவாசி உயர்ந்து வருகிறது. மக்கள் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.
ஆட்சிக்கு பாஜக வந்து 100 நாட்களாகி விட்டன. தாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை அவர்கள் மறந்து விட்டனர். ஊழல் உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பாக கொடுத்த வாக்குறுதிகளை அவர்கள் மறந்து விட்டனர்.
இப்படி உள்நாட்டில் பல பிரச்சினைகள் கவனிக்கப்படாமல் இருக்கும் நிலையில் ஜப்பானுக்குப் போய் டிரம்ஸ் வாசிப்பதில் என்ன பலன் இருக்க முடியும் என்றார் ராகுல் காந்தி.