ராக்கிங் கொடுமை: கோமாவில் இருந்த கேரள மாணவர் மரணம் - 6 சீனியர் மாணவர்கள் தலைமறைவு
பெங்களூர்: பெங்களூரில் தனியார் கல்லூரியில் நடந்த ராக்கிங் கொடுமையால் கேரள மாணவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அம்மாணவரின் உயிரிழப்புக்குக் காரணமாக ஆறு சீனியர் மாணவர்களைப் போலீசார் தேடி வருகின்றனர்.
கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த சையத் இப்ராஹிம் - ஹாரிபா தம்பதியினரின் மகன் அஹாப் இப்ராஹிம் (வயது 21). இவர், பெங்களூர் சோளதேவனஹள்ளி அருகே எசருகட்டா மெயின் ரோட்டில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
கடந்த ஜனவரி மாதம் 27-ந் தேதி கல்லூரி விடுதியில் உள்ள குளியல் அறையில் தலையில் பலத்த காயத்துடன் மயங்கி நிலையில் கிடந்த அஹாப்பை மீட்டு சக மாணவர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ‘கோமா' நிலையில் இருப்பதாக தெரிவித்தனர்.
மகனின் உடல்நிலைக் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த அஹாப்பின் பெற்றோர், ராக்கிங் தான் தங்களது மகனின் நிலைமைக்குக் காரணம் என குற்றம் சாட்டினர். ஆனால், மகனின் கல்வியைக் கருத்தில் கொண்டு அவர்கள் வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை எனக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, கடந்த பிப்ரவரி 6-ந் தேதி, மேல் சிகிச்சைக்காக கேரளா மாநிலம் கொச்சியில் இருக்கும் ஆஸ்பத்திரிக்கு அஹாப் மாற்றப்பட்டார். அங்கு அவர், தீவிர கண்காணிப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சைப் பலனளிக்காமல் கோமா நிலையிலேயே கடந்த 10ம் தேதி உயிரிழந்தார் அஹாப். அதனைத் தொடர்ந்து கொச்சி போலீஸ் நிலையத்தில் அஹாப் படித்த கல்லூரியைச் சேர்ந்த 6 சீனியர் மாணவர்கள் மீது புகார் அளிக்கப் பட்டது.
அதன்பேரில் போலீசார் இயற்கைக்கு மாறான மரணம் என்று வழக்கு பதிவு செய்து உள்ளனர். இதற்கிடையே அஹாப்பின் மரணம் குறித்து தகவலறிந்த சம்பந்தப்பட்ட 6 மாணவர்கள் தலைமறைவானதாகக் கூறப்படுகிறது.
அவர்களை கேரளா போலீசார் தேடிவருகிறார்கள். மாணவர் ஒருவர் மர்மமான முறையில் மரணமடைந்த சம்பவம் பெங்களூர் மற்றும் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.