'மோடி, அமித்ஷா பக்கோடா'... கல்லூரி முன் கடை போட்டு பெங்களூரு பட்டதாரிகள் நூதன போராட்டம்!
பிரதமர் மோடி பக்கோடா விற்பதும் ஒரு தொழில் தான் என்று கூறியதையடுத்து பெங்களூரில் கல்லூரி மாணவர்கள் பக்கோடா விற்கும் நூதன போராட்டத்தை நடத்தினர்.
பெங்களூரு: சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்று வேலைவாய்ப்பு பெருகவில்லையே? என்று பிரதமர் மோடியிடம் கேள்வி எழுப்பியது. இதற்கு பதிலளித்த அவர், பக்கோடா விற்றால் கூட நாளொன்றுக்கு ரூ.200 சம்பாதிக்கலாம் அது வேலைவாய்ப்பு இல்லையா என்று குறிப்பிட்டார்.
பிரதமரின் இந்த பேச்சுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பதிலடி கொடுத்திருந்தார். இந்நிலையில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பான இந்திய தேசிய மாணவர்கள் சங்கம் இன்று பெங்களூரில் பக்கோடா போராட்டத்தை முன்டுத்தனர்.

பட்டதாரிகள் பக்கோடா விற்று போராட்டம்
கல்லூரி முன்பு பட்டதாரி போல ஆடைகள் அணிந்து எண்ணெய் சட்டி முன் அமர்ந்து மாணவர் ஒருவர் பக்கோடா சுட்டு விற்பனை செய்யும் நூதன போராட்டம் நடத்தினர். பெங்களூரின் மவுண்ட் கார்மல் கல்லூரி, ஆர்சி கல்லூரி மற்றும் எஸ்ஜேபி கல்லூரி முன்பு இந்த போராட்டங்கள் நடந்ததாக என்எஸ்யூஐ தெரிவித்துள்ளது.

வித்தியாசமான பக்கோடா பெயர்
போராட்டத்தின் போது மற்ற மாணவர்கள் கையில் பக்கோடா கடைக்கான பதாகையை ஏந்தி நின்றனர். அதில் பக்கோடாக்களுக்கு மோடி, அமித்ஷா, எடியூரப்பா, யோகி ஆதித்யநாத் என்று பாஜக தலைவர்களின் பெயர்களே பக்கோடாக்களுக்கு வைக்கப்பட்டிருந்தன.

அரசு அளித்த உறுதி என்ன ஆனது?
இந்த போராட்டம் குறித்து தெரிவித்த மாணவர் அமைப்பின் துணைத் தலைவர் ஜித்தேந்திர ஷா, " நாங்கள் பல ஆண்டுகளாக வேலைவாய்ப்பிற்காக காத்திருக்கிறோம். ஆனால் பிரதமர் மோடி பக்கோடா விற்பதும் வேலை தான் என்று சொல்வதை கண்டிக்கிறோம். நாங்கள் அனைவரும் பணம் கட்டி படித்திருக்கிறோம், ஆனால் இன்றைய நிலையில் எங்களுக்கு வேலை இல்லை. 2 கோடி வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்படும் என்று அளித்த உறுதி என்னவாயிற்று என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

திரித்து பரப்பப்படுகிறது
ஆனால் காங்கிரஸ் மாணவர் அமைப்பின் இந்த கருத்திற்க பாஜக மறுப்பு தெரிவித்துள்ளது. கர்நாடக மாநில பாஜக செய்தித் தொடர்பாளர் சுரேஷ் குமார் பிரதமரின் கருத்து திரித்து அர்த்தம் கொள்ளப்படுவதாக கூறியுள்ளார். பிரதமர் மோடி வேலைவாய்ப்பு குறித்து கூறிய கருத்தை காங்கிரஸ் கட்சியினர் தவறாக புரிந்து கொண்டுள்ளனர். அதோடு மக்களிடமும் தவறான கருத்தையே அவர்கள் பரப்பி வருவதாகவும் சுரேஷ் குமார் குற்றம்சாட்டினார்.












Click it and Unblock the Notifications