ஜெருசலேம் விஷயத்தில் இந்தியா தவறான முடிவு எடுத்து விட்டது.. சுப்பிரமணியன் சுவாமி கண்டனம்
ஜெருசலேம் நகரத்தை இஸ்ரேலின் தலைநகராக அறிவிக்கும் விவகாரத்தில் இந்தியா தவறான முடிவு எடுத்துவிட்டதாக பாஜகவை சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்து இருக்கிறார்.
டெல்லி: ஜெருசலேம் நகரத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்து இருந்தார். இதற்கான வாக்கெடுப்பு இரண்டு நாட்கள் முன்பு ஐநா சபையில் நடந்தது.
இதில் இந்தியா அமெரிக்காவிற்கு எதிராக வாக்களித்தது. இன்னும் சில நாடுகளும் அமெரிக்காவிற்கு எதிராக வாக்கு அளித்து இருந்தது.
அமெரிக்காவிற்கு எதிராக இந்தியா வாக்களித்தது மிகவும் தவறான முடிவு என்று பாஜகவை சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்து இருக்கிறார். மேலும் இந்தியா இதன் மூலம் பெரிய தவறு ஒன்றை செய்து இருக்கிறது என்றும் கூறியுள்ளார்.

ஜெருசலேம் விவகாரம்
இஸ்ரேலின் தலைநகராக டெல் அவிவ் என்ற பகுதி இருந்து வந்தது. ஆனால் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஜெருசலேம் நகரத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிப்பதாக கூறினார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்டார். இதனால் ஐநா சபையில் இதுகுறித்து வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று கூறப்பட்டது.

தூதரகம்
அமெரிக்கா இஸ்ரேலின் டெல் அவிவ் பகுதியில் இருந்த தனது தூதரகத்தை உடனே ஜெருசலேம் பகுதிக்கு மாற்றியது. இதையடுத்து பாஜக கட்சியை சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமி ''அமெரிக்கா தனது தூதரகத்தை மாற்றியது போலவே இந்தியாவும் தனது தூதரகத்தை ஜெருசலேம் பகுதிக்கு மாற்றவேண்டும்'' என்று கூறியிருந்தார்.

ஐநா வாக்கெடுப்பு
ஐநாவில் இந்த விவகாரம் குறித்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 128 நாடுகள் மொத்தம் அமெரிக்காவின் அறிவிப்பிற்கு எதிராக வாக்களித்து இருந்தது. மொத்தம் 9 நாடுகள் மட்டும் அமெரிக்கவிற்கு ஆதரவு தெரிவித்து இருந்தது. இந்தியாவும் இந்த வாக்கெடுப்பில் அமெரிக்காவிற்கு எதிராக வாக்களித்து இருந்தது.

கண்டனம்
இந்தியா அமெரிக்காவிற்கு ஆதரவு அளிக்கும் என்றும் எதிர்பார்த்த சுவாமி இதனால் கோபம் அடைந்துள்ளார். பத்திரிக்கைக்கு அவர் அளித்த பேட்டியில் ''இந்தியா மிகவும் தவறான முடிவை எடுத்துவிட்டது. இந்த விஷயத்தில் இந்தியா அமெரிக்காவை ஆதரித்து இருக்க வேண்டும். இந்தியா செய்தது பெரும் பிழை'' என்று ஆளும் பாஜக அரசு குறித்து பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications