கட்டுக்கட்டாக பணம்! 'சட்டர்ஜியால் அவமானம் ஆகிப்போச்சு'... விட்டு விளாசும் திரிணாமூல் காங்கிரஸ்
கொல்கத்தா: நடிகை அர்பிதா முகர்ஜிக்கு சொந்தமான இடத்தில் இருந்து கட்டுக்கட்டாக ரூ.50 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், அமைச்சர் பார்தா சட்டர்ஜியால் கட்சிக்கு பெரும் அவமானமும் தலைகுனிவும் ஏற்பட்டுள்ளது என திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் குணால் கோஷ் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்காள மாநிலத்தின் கல்வித்துறையில் ஆசிரியர் பணி நியமனத்தில் பெரும் ஊழல் நடந்ததாக ஆதாரத்தின் பேரில் கிடைத்த தகவலால், அமலாக்கத்துறை அதிகாரிகள் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர்.
இதில், குறிப்பாக மாநிலத்தின் தற்போதைய கல்வி அமைச்சரான பரேஷ் சி மற்றும் தொழில் அமைச்சர் பர்த்தா சட்டர்ஜி, மானிக் பட்டாச்சாரியா மற்றும் அவர்களுக்கு நெருங்கிய நபர்களின் வீடு மற்றும் அவர்களுக்கு சொந்தமான இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

கட்டுக்கட்டாக பணம்
அமலாக்கத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட இந்த திடீர் ரெய்டில் அமைச்சர் பர்த்தா சட்டர்ஜிக்கு நெருங்கிய கூட்டாளியும் நடிகையுமான அர்பிதா முகர்ஜி என்பவர் வீட்டில் கட்டுக்கட்டாக பணம் பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவரது வீட்டில் இருந்து மட்டும் 500 ரூபாய் நோட்டுகள், 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் என கோடிக்கணக்கான பணம் இந்த ரெய்டில் சிக்கியது. மொத்தம் ர்பிதா முகர்ஜியின் வீட்டில் மட்டும் சுமார் ரூ.20 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக அமலாக்கத்துறையினர் தெரிவித்தனர். இந்த பணம் 10-ம் வகுப்பு தேர்வின் போது பெறப்பட்ட ஊழல் பணமாக இருக்கலாம் என அமலாக்கத்துறை அதிகாரிகள் சந்தேகிக்கித்தனர். நாடு முழுவதும் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அமைச்சர் பர்த்தா சட்டர்ஜி மற்றும் நடிகை அர்பிதா முகர்ஜி ஆகியோரு கைது செய்யப்பட்டனர்.

ரூ 50 கோடி பறிமுதல்
இந்த நிலையில், அர்பிதா முகர்ஜிக்கு சொந்தமான இடத்தில் இருந்து மேலும் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில், கிடைத்த பணத்தை எண்ணும் பணிக்காக 3 பெரிய எண்ணும் எந்திரங்கள் கொண்டு வரப்பட்டது. அந்த எந்திரங்கள் மூலம் எண்ணப்பட்டதில், 2 ஆயிரம் நோட்டுகள், 500 ரூபாய் நோட்டுகள் என மொத்தம் 29 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ரூ.20 கோடி ரோக்கம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மேலும் ரூ 29 கோடி என மொத்தம் 50 கோடி ரூபாயை அமலாக்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்த சம்பவம் மேற்கு வங்காளத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தர்மசங்கடத்தில் மம்தா
மத்தியில் ஆளும் மோடி அரசை கடுமையாக எதிர்த்து வரும் மம்தா பானர்ஜிக்கு, அவரது மந்திரிக்கு தொடர்புடைய இடங்களில் மூட்டை மூட்டையாக பணம் சிக்கியிருப்பது பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. பார்த்த சட்டர்ஜியின் செயல் தன்னை தனிப்பட்ட முறையில் மிகவும் காயப்படுத்தி விட்டதாகவும், அவர் தவறு செய்தால் தண்டனை அனுபவிக்கட்டும் என்று மம்தா பானர்ஜி பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பெரும் அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது
இந்த நிலையில், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளர் குணால் கோஷ், பார்தா சட்டர்ஜியால் கட்சிக்கு பெரும் அவமானமும் தலைகுனிவும் ஏற்பட்டுள்ளதாக கடுமையாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ''அடுத்தடுத்து நடைபெற்றும் வரும் நிகழ்வுகள் கவலை அளிக்கிறது. நடக்கும் நிகழ்வுகள் எல்லாம் கட்சிக்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது. பார்த்தா சாட்டர்ஜி ஏன் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறுகிறார். ஆனால், அவர் ஏன் பொது வெளியில் நான் அப்பாவி என சொல்லவில்லை? இப்படி சொல்ல அவருக்கு எது தடுக்கிறது?'' எனப் பேசினார்.

விளக்கம் அளித்து டுவிட்
முன்னதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்த குணால் கோஷ், 'பார்த்தா சட்டர்ஜி அமைச்சர் பொறுப்பில் இருந்தும், கட்சியில் இருந்தும் நீக்கப்படுவார்' என பதிவிட்டு இருந்தார். ஆனால், சிறிது நேரத்திலேயே அந்த ட்விட் பதிவை நீக்கிவிட்டார். பின்னர் இதற்கு விளக்கம் அளித்து மற்றொரு ட்விட் ஒன்றை போட்ட குணால் கோஷ் அதில், ''எனது முந்தைய ட்விட்டில் எனது தனிப்பட்ட கருத்தை மட்டுமே நான் தெரிவித்தேன். இன்று மாலை திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் கூட்டம் அவிஷேக் பானர்ஜி தலைமையில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் நானும் பங்கேற்க வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. எனவே கட்சி நிர்வாகிகள் பார்த்தா சட்டர்ஜி விவகாரத்தில் நடவடிக்கை எடுப்பார்கள். எனவே, எனது தனிப்பட்ட ட்விட்டை நான் அழித்துவிட்டேன்" எனப்பதிவிட்டு இருந்தார்.












Click it and Unblock the Notifications