பெங்களூர் கோர்ட்டில் நீதிபதி கெடு விதித்ததால் சுதாகரனும் சரண்- சிறையில் அடைப்பு!
பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி முன் சுதாகரனும் இன்றே சரணடைந்தார். அவரும் சிறையில் அடைக்கப்பட்டார்.
பெங்களூர்: வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் 4 ஆண்டு சிறைத் தண்டனை உறுதி செய்யப்பட்ட சுதாகரனும் இன்றே சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைந்தார். சிறப்பு நீதிமன்ற நீதிபதி கெடு விதித்த அரை மணிநேரத்தில் சுதாகரன் சரணடைந்தார். இதனையடுத்து அவரும் சிறையிலடைக்கப்பட்டார்.
ஜெயலலிதா மீதான வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் கூட்டு குற்றவாளிகளான சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. அத்துடன் உடனே பெங்களூரு நீதிமன்றத்தில் 3 பேரும் ஆஜராகவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
நீதிமன்றத்தில் சரணடைவதற்கு கால அவகாசம் கேட்டுப் பார்த்தது சசிகலா கோஷ்டி. ஆனால் உச்சநீதிமன்றம் இந்த கோரிக்கையை நிராகரித்தது.
இதனால் சென்னையில் இருந்து சாலை மார்க்கமாக புறப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரகார சிறை வளாக சிறப்பு நீதிமன்றத்தில் சசிகலாவும் இளவரசியும் சரணடைந்தனர். பின்னர் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஆனால் சுதாகரன் சரணடையவில்லை. சுதாகரன் சார்பில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் ஒரு மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
அதில் சுதாகரனுக்கு உடல்நலக் குறைவு என்பதால் இன்று சரணடையவில்லை. நாளை நீதிமன்றத்தில் சரணடைவார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த கோரிக்கையை நீதிபதி நிராகரித்து சுதாகரன் சரணடைய கெடுவிதித்தார்.
இதனைத் தொடர்ந்து அடுத்த அரை மணிநேரத்தில் சுதாகரனும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஸ்வத் நாராயணனிடம் சரணடைந்தார். அவரும் உரிய சோதனைகளுக்குப் பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.