வாழ்க்கை முழுவதும் சோகத்திலேயே கரைந்து மறைந்து போன சுனந்தா
டெல்லி: பாகிஸ்தான் பெண் பத்திரிக்கையாளர் மெஹர் தராருக்கும், தனது கணவருக்கும் கள்ளத் தொடர்பு இருக்கிறது. இருவரும் தனிப்பட்ட முறையில் செய்திகளைப் பரிமாறிக் கொள்கின்றனர். அந்தப் பெண் ஐஎஸ்ஐ உளவாளி என்று கடுமையான குற்றச்சாட்டுக்களைக் கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் சுனந்தா. அவரது திடீர் மரணம், அதற்கு முன்பு நடந்த சம்பவங்கள் இந்த விவகாரத்தை பெரும் பரபரப்புக்கு கொண்டு சென்றுள்ளன.
சுனந்தா சாட்டிய குற்றச்சாட்டுக்கள் மிகக் கடுமையானவை. அதேசமயம், அவரும், அவரது கணவரும் இணைந்து அவற்றை மறுத்து ஒரு அறிக்கை வெளியிட்டதால் இதில் உண்மையில் நடந்தது என்ன என்பது பெரும் மர்மமாக உள்ளது. இந்த நிலையில்தான் சுனந்தாவின் இறந்த உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
52 வயது சுனந்தா
52 வயதாகும் சுனந்தா தனது கணவரின் போக்கால் கடும் மன வேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால்தான் அவர் தற்கொலை முடிவை நாடியதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
டிவிட்டர் மூலம் தகவல் தெரிவித்த தரூர்
முன்னதாக இன்று இரவு 8.01 மணியளவில் ஒரு டிவிட்டர் செய்தியை வெளியிட்டிருந்தார் தரூர். அதில், தனது மனைவிக்கு உடல் நலம் சரியில்லை என்பதால் ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் தான் பங்கேற்கவில்லை என்று கூறியிருந்தார் தரூர்.
மாறி மாறி வந்த டிவிட்டர் புகார்கள்
இந்த விவகாரத்திற்கு முன்பு அதாவது புதன்கிழமையன்று சுனந்தா அடுக்கடுக்கான புகார்களை தரூர் மீதும், தரார் மீதும் சுமத்தியிருந்தார். மேலும் இதுதொடர்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கும் அவர் பேட்டி கொடுத்திருந்தார்.
உண்மையான காதல் எங்கே...
சுனந்தா கூறுகையில், என் ட்வீட்களுக்கு நான் உத்தரவாதம். அந்த பெண் என் கணவரை பின் தொடர்கிறார். ஆண்கள் முட்டாள்கள். அந்த பெண் ஒரு பாகிஸ்தான் ஏஜென்ட், இந்த உலகில் காதல், உண்மையாக இருப்பது எங்கே.
2013 ஏப்ரல் முதலே கள்ளக்காதல்
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தரூருக்கும், மெஹருக்கும் இடையே கள்ளத் தொடர்பு உள்ளது என்று தெரிவித்த சுனந்தா இதனால் ஒரு பெண்ணாக, மனைவியாக தான் நிலை குலைந்துவிட்டதாகக் கூறியுள்ளார். ட்விட்டர் தவிர பிளாக்பெர்ரியிலும் அவர்கள் மெசேஜ் அனுப்பிக் கொள்கின்றனர் என்று கூறியிருந்தார் சுனந்தா.
டிவியில் பாய்ச்சல்
மேலும் தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், நான் இதயம் நொறுங்கிப் போயுள்ளேன். எனது கணவரை விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளேன் என்று கூறியிருந்தார்.
அடுத்த நாளே மறுப்பு
ஆனால் அடுத்த நாளே அதே டிவிக்கு அளித்த பேட்டியில் விவாகரத்து குறித்து தான் பேசியதை மறுத்தார். அதேசமயம், தரார் மீதான புகார்களை மீண்டும் வலியுறுத்தினார். அதன் பிறகு தரூரும், அவரும் இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டு மேலும் குழப்பினர்.
சுனந்தாவை கடுமையாக விமர்சித்த தரார்
அதேசமயம், சுனந்தாவின் புகார்களை திட்டவட்டமாக மறுத்தார் தரார். அவர் வெளியிட்ட டிவிட்டர் செய்தியில், தனது கட்டுப்பாட்டிலேயே இல்லாத பெண் கூறுவது பற்றி எல்லாம் என்னால் எதுவும் பதில் சொல்ல முடியாது. ஐஎஸ்ஐ ஏஜென்ட், தரூரை பின் தொடர்பவர்...அந்த பெண் யார் என்பதை காட்டுகிறது என்று மெஹர் தெரிவித்திருந்தார்.
திருமணத்தையே அவமதித்து விட்டார் சுனந்தா
மேலும், ஒரு பெண் மற்றொரு பெண்ணை தனது கணவருடன் சேர்த்து பேசுவது இருப்பதிலேயே கீழ்த்தரமானது. திருமணத்திற்கு மரியாதையே இல்லை என்று மெஹர் ட்வீட் செய்துள்ளார். இந்திய தொலைக்காட்சி சேனல் ஒன்று தரூர் விவகாரம் குறித்து என்னிடம் கேட்டது. அவர்களுக்கு நான் கேமரா முன்பு பேட்டி அளிக்க வேண்டுமாம். நான் தர மாட்டேன். அழுக்கு குறித்து பதில் சொல்லத் தேவையில்லை என்று மெஹர் ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.
சுனந்தாவுக்காக பதவியிழந்தவர் தரூர்
சுனந்தா மீதான காதலால் பல சர்ச்சைகளில் சிக்கியவர் தரூர். துபாயில் அப்போது வசித்து வந்த சுனந்தா, ஐபிஎல் கேரளா அணியில் ரூ. 50 கோடிக்கு பங்குகள் வைத்திருந்தார் என்று வந்த புகார்களால் தரூருக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டு அவர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அதன் பிறகுதான் தரூரும், சுனந்தாவும் திருமணமே செய்து கொண்டனர்.
3வது திருமணம்
சசி தரூருடனான சுனந்தாவின் திருமணம் அவருக்கு 3வது திருமணமாகும். முதல் கணவர் பெயர் சஞ்சய் ரெய்னா. அவரை விவாகரத்து செய்த பின்னர் கேரளாவைச் சேர்ந்த சுஜித் மேனன் என்பவரை மணந்தார். அவர் சாலை விபத்தில் இறந்தார். பின்னர்தான் சசிதரூரை மணந்தார். 2வது கணவர் மூலம் 21 வயதில் சிவ் மேனன் என்ற மகன் சுனந்தாவுக்கு உள்ளார்.