சுனந்தா கொலை வழக்கில் மகன் ஷிவ் மேனனிடம் டெல்லி போலீசார் தீவிர விசாரணை
டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் கொலை வழக்கில் அவரது மகன் ஷிவ் மேனனிடம் டெல்லி போலீசார் இன்று விசாரணை நடத்தினர்.
முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 17ம் தேதி டெல்லியில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் பிணமாகக் கிடந்தார். அவர் ஆல்பிராக்ஸ் மருந்தை அளவுக்கதிகமாக எடுத்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறப்பட்டது. ஆனால் அவர் விஷம் வைத்து கொலை செய்யப்பட்டதாக டெல்லி போலீஸ் கமிஷனர் பஸ்ஸி அண்மையில் தெரிவித்தார்.

அதன் பிறகு சுனந்தாவின் வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது. இது தொடர்பாக தரூர், சுனந்தாவுக்கு நெருக்கமானவர்கள் உள்ளிட்டோரிடம் டெல்லி போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் சிறப்பு விசாரணைக் குழுவினர் சுனந்தா புஷ்கரின் மகன் ஷிவ் மேனனிடம் இன்று விசாரணை நடத்தியுள்ளனர். துபாயில் வசிக்கும் ஷிவ் விசாரணைக்காக டெல்லி வந்துள்ளார்.
சுனந்தாவின் மூன்றாவது கணவர் தரூர். இரண்டாவது கணவருக்கு பிறந்தவர் தான் ஷிவ் மேனன். ஷிவ் மேனனிடம் என்னென்ன விவகாரங்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர் என்று விவரம் வெளியிடப்படவில்லை.












Click it and Unblock the Notifications