மரணத்திற்கு முன்பு உயிரைக் காக்க யாருடனோ போராடியுள்ளார் சுனந்தா... யார் அந்த நபர்?
விஷம் காரணமாகவே சுனந்தா இறந்துள்ளார் என்று ஆர்.டி.ஓ. விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த விஷம் சுனந்தாவுக்குக் கொடுக்கப்பட யார் காரணம் என்பது குறித்து விசாரிக்குமாறும் டெல்லி காவல்துறைக்கு ஆர்டிஓ பரிந்துரைத்துள்ளார்.
இந்த நிலையில் சுனந்தாவின் உடலில் காணப்பட்ட காயங்கள் குறித்து புதுத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கிட்டத்தட்ட 12க்கும் மேற்பட்ட காயங்கள் சுனந்தாவின் உடலில் காணப்பட்டன. இவை கடைசி நேரத்தில் யாரிடமிருந்தோ தப்ப சுனந்தா போராடியபோது ஏற்பட்ட காயங்களாக இருக்கலாம் என்று தற்போது பரபரப்பு எழுந்துள்ளது.
உடல் ரீதியாக யாருடனோ சுனந்தா போராடியபோது இந்தக் காயம் ஏற்பட்டிருக்கலாம் என்று டெல்லி எய்ம்ஸ் டாக்டர்கள் கருத்து தெரிவி்த்துள்ளனர். மரணத்திற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு இது நடந்திருக்கலாம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, இந்த வழக்கில் இதுவரை 11 பேரின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சசி தரூர், அவரது உதவியாளர் ராஜேஷ் குமார், ஆலோசகர் சிவக்குமார், சுனந்தாவின் இரு சகோதரரக்ள், அவரது மகன் சிவ் மேனன், இரண்டு டாக்டர்கள், சுனந்தாவின் உதவியாளர் நாராணன், டிரைவர் பஜ்ரங்ஜி, மூத்த பத்திரிக்கையாளர் நளினி சிங் ஆகியோரே அவர்கள்.
அதில் நாராயணன் கொடுத்துள்ள வாக்குமூலத்தில், சுனந்தாவும், தரூரும் அடிக்கடி கடுமையான சொற்களால் வாதம் செய்து கொள்வார்கள். சில நேரம் உடல் ரீதியாகவும் மோதிக் கொள்வார்கள் என்று கூறியுள்ளார்.
ஆனால் சுனந்தா தங்களிடம் திருமண வாழ்க்கையில் பிரச்சினை எதுவும் இல்லை என்றும் தான் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கூறியுள்ளதாக அவரது சகோதரர் ராஜேஷ் கொடுத்துள்ள வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.