"நெட்"டில் ஆபாசத்தைப் பரப்பினார்.. சன்னி லியோன் மீது பெண் புகார்- போலீஸ் வழக்கு!
தானே: இணையதளத்திலும், சமூக வலைதளங்களிலும் ஆபாசமான செய்திகள், படங்களைப் பரப்பினார் என்று கூறி மும்பை போலீஸில் நடிகை சன்னி லியோன் மீது புகார் கூறப்படுட்டுள்ளது. இதையடுத்து போலீஸார் அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து மும்பை, டோம்பிவிலி காவல் நிலையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
34 வயதான சன்னி லியோன் மீது 292, 292ஏ, 294 ஆர் டபிள்யூ 34 ஆகிய ஐபிசி சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்திய மகளிர் பிரதிநிதித்துவ சட்டம், ஐடி சட்டத்தின் கீழும் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
30 வயதான அஞ்சலி பாலன் என்ற இல்லத்தரசி கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அஞ்சலி பாலன் கொடுத்த புகாரில் தான் இணையதளங்களை பிரவுஸ் செய்து கொண்டிருந்தபோது சன்னி லியோனின் பல ஆபாசப் படங்கள், வீடியோக்கள், அவர் குறித்த ஆபாசச் செய்திகள் பெருமளவில் இணையதளத்திலும், சமூக வலைதளங்களிலும் கொட்டிக் கிடப்பதாகவும், மேலும் சன்னி லியோனின் இணையதளத்திலும் அவை அதிக அளவில் உள்ளதாகவும் கூறியிருந்தார்.
இதுபோன்ற ஆபாச படங்களும், வீடியோக்களும் மக்களின் மனதைச் சிதைக்கும். குறிப்பாக சிறார்கள் மனதை கெடுத்து விடும் என்பதால் இவற்றை வெளியிட்ட சன்னி லியோன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கூறியிருந்தார்.
இதையடுத்து வழக்கைப் பதிவு செய்த போலீஸார் மேல் விசாரணைக்காக இதை சைபர் குற்றப் பிரிவுக்கு அனுப்பி வைத்துள்ளனர் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.