'சீனி' தலைவராக தொடரலாம்.. கிரிக்கெட் வாரியத்தில் முறைகேடுகள் நடைபெறுகின்றன: உச்சநீதிமன்றம் அதிரடி!!
டெல்லி: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக என்.சீனிவாசன் தொடரலாம்..ஆனால் ஐபிஎல் விவகாரங்களில் தலையிடக் கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன் கிரிக்கெட் வாரியத்தில் முறைகேடுகள் நடைபெறுவதாகவும் அதிரடி காட்டியுள்ளது உச்சநீதிமன்றம்
இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் சீனிவாசன், 3வது முறையாக தலைவர் பதவிக்குப் போட்டியிட தடை விதிக்கக் கோரி பீகார் கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கில்,ஆந்திர மாநில உயர்நீதிமன்றத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி மீதான சொத்துக் குவிப்பு வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்த வழக்கின் குற்றப்பத்திரிக்கையில் சீனிவாசன் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. அதேபோல மேட்ச்பிக்ஸிங் விவகாரத்தில் சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன் சிக்கியுள்ளார். எனவே சீனிவாசன் மீண்டும் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், தடை விதிக்க மறுத்தது. அதேசமயம், சீனிவாசன் போட்டியிடலாம்,தேர்தலில் வென்றால் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொள்ளக் கூடாது. மற்ற நிர்வாகிகள் பதவியேற்கலாம் என்று கூறியிருந்தது.
இந்தப் பின்னணியில் நேற்று நடந்த வாரியத்தின் வருடாந்திர பொதுக் குழுக் கூட்டத்தில், சீனிவாசன் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது ஆதரவாளர்களே பிற பதவிகளுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இருப்பினும் உச்சநீதிமன்ற உத்தரவின்படி இன்னும் சீனிவாசன் பதவியேற்கவில்லை. மற்ற நிர்வாகிகள் பதவியேற்றுள்ளனர். இதுகுறித்து சீனிவாசன் கருத்து தெரிவிக்கையில், உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படி நான் பதவியேற்கவில்லை. மற்றவர்களை பதவியேற்குமாறு அறிவுறுத்தியுள்ளேன். கோர்ட் உத்தரவுக்காக காத்திருக்கிறேன் என்றார்.
இந்த நிலையில் இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது கிரிக்கெட் வாரியத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஐபிஎல் தொடர்பான வழக்குகளில் இருந்து சீனிவாசன் விலகி இருப்பார். ஐபிஎல் முறைகேடுகள் தொடர்பாக அருண் ஜெட்லி, விவேக் குப்தா ஆகியோர் கொண்ட விசாரணைக்குழு விசாரணை நடத்தும் என்றார்.
பீகார் கிரிக்கெட் சங்க வழக்கறிஞர் வாதாடும்போது, ஐபிஎல் முறைகேடு தொடர்பாக வெளியில் உள்ளவர்களால் விசாரணை நடத்தப்பட வேண்டும். பிசிசிஐ அமைப்பால் நடத்தப்படக்கூடாது என்று வலியுறுத்தினார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவராக சீனிவாசன் தொடரலாம். தலைவராக தொடர்ந்தாலும் ஐ.பி.எல். விவகாரங்ங்களில் தலையிடக்கூடாது. கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தில் தவறுகள் நடக்கின்றன என்று குறிப்பிட்டனர். மேலும் தலைவராக மீண்டும் தேர்வு பெற்றுள்ள சீனிவாசனின் நிலை என்ன? என்பதை அக்டோபர் 7-ந் தேதி முடிவு செய்யப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications