குஜராத்: யாருக்கு ஓட்டுப் போட்டோம் சீட்டை ஆய்வு செய்ய கோரிய காங். மனு தள்ளுபடி!
வாக்குப்பதிவு ஒப்புகை சீட்டுகளை சோதனை செய்ய கோரிய காங்கிரஸின் வழக்கை உச்சநீதிமன்றம் நிராகரித்து உள்ளது.
அகமதாபாத் : குஜராத் சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களையும், அதில் இணைக்கப்பட்டிருந்த யாருக்கு ஓட்டு போட்டோம் என்கிற சீட்டுகளையும் ஆய்வு செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்ற காங்கிரஸின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
குஜராத் மாநில சட்டசபை தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடந்து முடிந்தது. இதில் பல்வேறு இடங்களில் வாக்கு இயந்திரங்கள் தவறாக பயன்படுத்தப்பட்டதாக புகார் எழுந்தது.

இந்நிலையில், குஜராத்தில் வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்பட்ட இயந்திரங்களை சோதிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது.
அந்த வழக்கில், வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளில் முறைக்கேடு நடப்பதாகவும், அதனால் யாருக்கு மக்கள் வாக்களித்து இருக்கிறார்கள் என்கிற ஒப்புகை சீட்டையும், வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒப்பிட்டு ஆராயவும் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட கோரப்பட்டிருந்தது.
இதை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது இல்லை என்று சொல்லி தள்ளுபடி செய்தனர். மேலும், தேர்தல் சீர்திருத்தங்களுக்காக வேண்டுமானால் தனியாக மனு செய்யலாம் என்று காங்கிரஸிற்கு நீதிபதிகள் அறிவுறுத்தி உள்ளனர்.












Click it and Unblock the Notifications