காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ய கோரும் வழக்கு.. ஜனவரி 19ம் தேதிக்கு ஒத்திவைத்த சுப்ரீம்கோர்ட்
Recommended Video
டெல்லி: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 35-ஏ தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தபோது, வழக்கை ஜனவரி 19ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர் நீதிபதிகள்.
ஜம்மு-காஷ்மீரின் நிரந்தர குடியுரிமை பெற்றவர்கள் யார் என்பதை வரையறை செய்யும் சட்டப்பிரிவு 35ஏ, பிற மாநிலத்தவர்கள் காஷ்மீரில் சொத்துக்கள் வாங்குவதை தடுக்கும் வகையில் உள்ளது. இதையெல்லாம் எதிர்த்து இந்த சட்டப்பிரிவை செல்லாது என அறிவிக்கக் கோரி என்ஜிஓ தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
கடந்த 5ஆம் தேதி வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா முன்னிலையில் வழக்கு விசாரணை வந்தபோது, மூன்று நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச்சில் ஒருவர் அன்று வரவில்லை என்பதால் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
இன்று மீண்டும் விசாரணை நடைபெற்றது. ஜம்மு காஷ்மீர் அரசு சார்பில் ஆஜரான சொலிசிடர் ஜெனரல் துஷ்கர் மேத்தா, காஷ்மீர் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான பணிகளில் பாதுகாப்பு அமைப்புகள் ஈடுபட்டுள்ளன என்று தெரிவித்தார். மத்திய அரசு சார்பில் ஆஜரான, அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் வாதிடுகையில், உள்ளாட்சி தேர்தல் அமைதியாக முடியட்டும். அதன்பிறகு இதுபற்றி விசாரிக்கலாம் என்று கோரிக்கைவிடுத்தார்.
இதையடுத்து வழக்கு விசாரணை 2019ம் ஆண்டு ஜனவரி 19ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
வழக்கு விசாரணைக்கு வருவதையொட்டி, காஷ்மீர் பள்ளத்தாக்கின் பல பகுதிகளிலும் ஜம்மு பிராந்தியத்திலும் இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து தொடரவேண்டும் என்பது போராட்டக்காரர்கள் கோரிக்கை.