தப்பினார் தயாநிதி மாறன்...செப்.14 வரை சி.பி.ஐ.கைது செய்ய சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை!!
டெல்லி: சட்டவிரோத தொலைபேசி இணைப்பக வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனை அடுத்த மாதம் 14-ந் தேதி வரை சி.பி.ஐ.கைது செய்ய இடைக்காலத் தடை விதித்துள்ளது உச்சநீதிமன்றம். இதனால் கைது நடவடிக்கையில் இருந்து தற்காலிகமாக தப்பியிருக்கிறார் தயாநிதி மாறன்.
700க்கும் அதிகமான பி.எஸ்.என்.எல். தொலைபேசி இணைப்புகள் மூலம் சட்டவிரோதமாக இணைப்பகத்தில் தன் வீட்டில் வைத்திருந்தார் தயாநிதி மாறன் என்பது சி.பி.ஐ. வழக்கு. இந்த சட்டவிரோத தொலைபேசி இணைப்பகங்கள் மூலம் தயாநிதி மாறனின் சகோதரர் கலாநிதி மாறன் நடத்தும் சன் டிவி குழுமம் ஆதாயம் அடைந்தது என்பதும் குற்றச்சாட்டு.

இந்த வழக்கில் தயாநிதி மாறனுக்கு 6 வார இடைக்கால முன் ஜாமீன் வழங்கியிருந்தது சென்னை உயர்நீதிமன்றம். ஆனால் சி.பி.ஐ. விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்காத காரணத்தால் அவரது முன் ஜாமீனை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சி.பி.ஐ. முறையிட்டது.
இம்மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தயாநிதி மாறனுக்கு வழங்கிய முன் ஜாமீனை ரத்து செய்தது; அத்துடன் 3 நாட்களுக்குள் (வியாழக்கிழமைக்குள்) சி.பி.ஐ. முன் சரணடையவும் உத்தரவிட்டிருந்தது.
ஆனால் சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து தயாநிதி மாறன் மனு உச்சநீதிமன்றத்தில் நேற்று மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். தமது மனுவை அவசரமாகக் கருதி விசாரிக்க வேண்டும் என்று நீதிபதிகள் டி.எஸ். தாக்கூர், வி. கோபால கௌடா, ஆர். பானுமதி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் ஆஜரான மூத்த வழக்கறிஞரும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான அபிஷேக் மனு சிங்வி கேட்டுக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து இம்மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது. இன்றைய விசாரணையின் போது, தயாநிதி மாறனின் முன் ஜாமீனை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. மேலும் செப்டம்பர் 14-ந் தேதி வரை தயாநிதியை சி.பி.ஐ.கைது செய்யவும் இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் இது தொடர்பாக 2 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு சி.பி.ஐக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications